சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை வரும் 23-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.
அந்த மாநிலத்தை விமான போக்குவரத்துடன் இணைக்கும் நோக்கில், பாக்யாங் நகரில் புதிதாக விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதை மோடி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, அந்நகரில் உள்ள புனித சேவியர் பள்ளி மைதானத்தில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் பங்கேற்று அவர் உரையாற்றுகிறார்.
அன்றைய தினமே அவர் தில்லி திரும்புகிறார் என்று சிக்கிம் தலைமைச் செயலர் ஏ.கே.ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
பிரதமர் அலுவலகமும், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகமும் பிரதமரின் வருகையை உறுதிப்படுத்தின. விமான நிலையத்தை அவர் தொடங்கி வைக்க இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. புதிய விமான நிலையத்தில் அக்டோபர் முதல் வாரத்தில் விமான சேவை தொடங்கும் என்று ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
இந்த விமான நிலையம், தலைநகர் காங்டாக்கிலிருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.