ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் சென்ற பயணிகளுக்கு மூக்கு, காதில் ரத்தக் கசிவு

ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் சென்ற பயணிகளுக்கு மூக்கு, காதில் ரத்தக் கசிவு


மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தில், காற்றழுத்த கருவி இயக்கப்படாததால் விமானத்தில் பயணித்தவர்களுக்கு மூக்கு மற்றும் காதில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. விமானப் பணியாளர்கள் காற்றழுத்த கட்டுப்பாட்டு கருவியை ஆன் செய்யாததால் இவ்வாறு நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து விமானப் போக்குவரத்து செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
166 பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் 5 பேருடன் மும்பையில் இருந்து ஜெய்ப்பூருக்கு போயிங் 737 ரக ஜெட் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டது. விமானம் புறப்படுவதற்கு முன்பு காற்றழுத்தத்தை சமாளிப்பதற்கான கட்டுப்பாட்டு கருவியை ஆன் செய்ய வேண்டும். ஆனால் விமானப் பணியாளர்கள் அதை ஆன் செய்ய மறந்து விட்டனர். அதனால் பயணம் செய்தவர்களால் விமானத்தின் உள்ளே ஏற்பட்ட காற்றழுத்தத்தை சமாளிக்க முடியாமல் போனது. அதனால் அவர்கள் அனைவருக்கும் ஆக்ஸிஜன் முகமூடி அளிக்கப்பட்டது. எனினும் அவர்களுக்கு காது மற்றும் மூக்கு பகுதிகளில் ரத்தக் கசிவு ஏற்பட்டது. அதையடுத்து மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது.
பயணம் செய்த 166 பேரில் 30 பயணிகள் பாதிக்கப்பட்டனர். சிலருக்கு மூக்கு, காதில் ரத்த கசிவு ஏற்பட்டது. சிலர் தலைவலி என்று கூறினர். அவர்கள் அனைவரும் பரிசோதனைக்காக விமான நிலையத்தில் இருந்த மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டனர். காதில் ரத்தக் கசிவு ஏற்பட்ட 5 ஆண்கள் தற்காலிக லேசான காது கேளாமையினால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு 10 நாள்களுக்கு லேசாக காது கேட்காது என்றும், அதுவரை அவர்கள் விமானப்பயணம் மேற்கொள்ளக் கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். விமான ஓட்டுநர்களின் கவனக் குறைவால் இந்த நிகழ்வு ஏற்பட்டிருக்கலாம். இந்த நிகழ்வு குறித்து விமானப் போக்குவரத்து விசாரணை அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com