தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள இறக்குமதி மணலுக்கான கொள்முதல் தொகையை டன்னுக்கு ரூ.2,050 வீதம் நீதிமன்றத்தில் செலுத்துவதற்கு தமிழக அரசுக்கு மேலும் ஒரு வாரம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள இறக்குமதி மணல் தொடர்பாக எம்.ஆர்.எம். ராமையா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 20-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில், டன் மணலுக்கு ரூ. 2,750 ஆக விலை நிர்ணயிக்க வேண்டும் என எதிர்த்தரப்பு சார்பில் கோரப்பட்டது. ஆனால், டன் மணலுக்கு ரூ. 2,050 வீதம் விலை அளிக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள இறக்குமதி மணலை டன்னுக்கு ரூ.2,050 விலையில் தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 12-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, இறக்குமதி மணலுக்கான தொகையை டன்னுக்கு ரூ.2,050 வீதம் தமிழக அரசு ஒரு வாரத்தில் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்றும், அத்தொகையை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும். இந்த மனு தொடர்பாக செப்டம்பர் 20-ஆம் தேதி மீண்டும் விசாரணை நடைபெறும்' எனத் தெரிவித்திருந்தது.
இதன்படி, இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி. லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி, இறக்குமதி மணலுக்கான தொகையை செலுத்துவதற்கு 8 வாரம் அவகாசம் தேவைப்படுகிறது' என்றார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இறக்குமதி மணல் விவகாரத்தில் மணலுக்கான கொள்முதல் தொகையை செலுத்த தமிழக அரசுக்கு மேலும் ஒரு வாரம் மட்டுமே அவகாசம் அளித்து உத்தரவிட்டனர்.