இந்தியாவின் ஏழை மக்கள் மற்றும் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் பணத்தை எடுத்து பிரதமர் மோடி அம்பானிக்கு வழங்கியதாக ராகுல் காந்தி திங்கள்கிழமை குற்றம்சாட்டினார்.
2 நாள் பயணமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது தொகுதியான அமேதிக்கு திங்கள்கிழமை சென்றார். கடந்த சில நாட்களாகவே, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடுமையாக குற்றம்சாட்டி வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக அவர் இன்றும் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக குற்றம்சாட்டி பேசினார். இதுதொடர்பாக, அவர் பேசுகையில்,
"இந்தியாவின் காவல்காரர் ஏழை மக்கள், உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்கள் ஆகியோரது பையில் இருந்து ரூ.20,000 கோடியை எடுத்து அம்பானியின் பையில் போட்டுள்ளார்.
விமான ஒப்பந்தத்தின் விலை ஏன் வெளியிடப்படவில்லை. அம்பானிக்கு எப்படி ஒப்பந்தம் வழங்கப்பட்டது. பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஃபிரான்கோய்ஸ் ஹோலன்ட் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
பிரதமர் உரைகளை ஆற்றுகிறார், ஆனால் பதில் இல்லை. அவரால் எனது கண்களை பார்க்கமுடியவில்லை. பதில் தருவதற்கான தைரியம் அவரிடம் இல்லை.
பாஜக ஆட்சியில் ஏழைகளும், விவசாயிகளும் அழுகின்றனர். அனில் அம்பானி, விஜய் மல்லையா மற்றும் லலித் மோடி உள்ளிட்டோர் அனைத்து நன்மைகளும் பெறுகின்றனர். தற்போதைய அரசு குறிப்பிட்ட ஒருசில 5 முதல் 10 பேருக்கு மட்டுமே அனைத்து நன்மையையும் செய்கிறது" என்றார்.