காங்கிரஸ் கட்சி மிகவும் அபாயகரமானது என்ற கர்நாடக ஆரம்பக் கல்வித் துறை அமைச்சர் என்.மகேஷின் சர்ச்சை பேச்சால், கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மஜத கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சாம்ராஜ்நகர் தொகுதியில் போட்டியிட்டு என்.மகேஷ் வெற்றி பெற்றார். 104 இடங்களைப் பிடித்த பாஜக, எடியூரப்பா தலைமையில் ஆட்சியைப் பிடித்தது. பின்னர் அறுதிப்பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், பாஜக ஆட்சி கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ், மஜத கூட்டணி அமைத்து கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடித்தது. கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த என்.மகேஷுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அவருக்கு ஆரம்பக் கல்வித் துறை ஒதுக்கப்பட்டது.
இந்தநிலையில், அண்மையில் சாம்ராஜ்நகர் நகரசபைத் தேர்தல் முடிவின்போது காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 கட்சிகளைச் சேர்ந்த 8 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவ்விரு கட்சியினரிடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தநிலையில், சாம்ராஜ்நகரில் ஞாயிற்றுக்கிழமை நகரைத் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியில் அமைச்சர் என்.மகேஷ் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் காங்கிரஸ் கட்சி பார்த்தீனியம் செடி போன்றது. அதனுடன் கூட்டணி வைப்பது அபாயகரமானது என்று கூறியுள்ளனர்.
அதற்கு அமைச்சர் என்.மகேஷ், காங்கிரஸ் கட்சி, பார்த்தீனியம் செடி போல மிகவும் அபாயகரமானதுதான். அதனை வெட்டும் பணியில் பகுஜன் சமாஜ் கட்சி ஈடுபடும் எனத் தொண்டர்களை சமாதானப்படுத்தியுள்ளார்.
காங்கிரஸ், மஜத கூட்டணி அமைத்து, மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், கூட்டணி அரசில் அமைச்சராக உள்ளவரே, காங்கிரஸ் கட்சி மிகவும் அபாயகரமானது எனக் கூறியுள்ளது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.