புது தில்லி: ஒருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலே அவர்களை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
ஒருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலே, அவர் குற்றங்கள் செய்ததாக முகாந்திரம் இருக்கிறது என்பது கருத்து. எனவே, அப்படிப்பட்ட நபர்களை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடுக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, ஒருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலே அவரை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தனர்.
மேலும், அரசியலில் ஊழலும் முறைகேடுகளும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவது கவலை அளிப்பதாகவும் நீதிபதிகள் கருத்துக் கூறினர்.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ஒருவர் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை. நாடாளுமன்றம் மட்டுமே சட்ட திருத்தத்தால் இதுபோன்ற தடைகளை விதிக்க முடியும் என்றும், அரசியல் கட்சிகள் தாங்களாகவே அடிப்படை நாகரீகத்தை கருத்தில் கொண்டு இதுபோன்ற பின்னணி கொண்டவர்களை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.