உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் நியமனத்துக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ரா வரும் அக்டோபர் 2-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, நீதித்துறையின் மரபுப்படி தற்போதைய தலைமை நீதிபதி தனக்கு அடுத்து பதவிக்கு வருபவரின் பெயரை பரிந்துரை செய்ய வேண்டும். அதன்படி உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய்யின் பெயரை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் அலுவலகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இதற்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக பரிந்துரையை அவருக்கு அனுப்பியது.
இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய்யை நியமித்தார். இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் 46-ஆவது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரஞ்சன் கோகாய் அக்டோபர் 3-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.
இந்த நியமனத்தை எதிர்த்து ஆர்.பி.லுத்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர் மற்றும் டி.ஓய்.சந்திரசூட் ஆகியர் அமர்வு முன் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது.
அப்போது, இதில் தலையிட மறுப்பதாக கூறி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு வழக்கை தள்ளுபடி செய்தது.