புது தில்லி: புது தில்லியில் இன்று 4 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் பலியாகினர்.
காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
அஷோக் விஹார் பகுதியில் இருந்த 4 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்றும், அதன் நிலை மிக மோசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை படை வீரர்களும், தில்லி தீயணைப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.