புது தில்லி: சபரிமலையில் எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோயிலுக்குள் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இந்தியன் யங் லாயர்ஸ் அசோசியேஷன் மற்றும் பல்வேறு தரப்பினர் மனுக்கள் தொடுத்திருந்தனர். இந்த மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது. அப்போது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்ல தடை விதிப்பது பாகுபாடு ஆகாதா? அரசியலமைப்பு சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகாதா? என்பது உள்ளிட்ட 5 கேள்விகளை நீதிபதிகள் பதிவு செய்திருந்தனர். இந்த கேள்விகள் குறித்து அரசியல் சாசன அமர்வு முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்து, அரசியல் சாசன அமர்வுக்கு மனுக்களை நீதிபதிகள் பரிந்துரை செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திராசூட், இந்து மல்கோத்ரா ஆகிய 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு தொடர்ச்சியாக 8 நாள்கள் விசாரணை நடத்தியது.
இதையடுத்து, மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி ஒத்திவைத்திருந்தனர். இதன்படி, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு தனது தீர்ப்பை வெள்ளியன்று வெளியிட்டுள்ளது. அதில் பெண்களை கடவுளாக மதிக்கும் நம் நாட்டில் அவர்களை பலவீனமாகக் கருதக் கூடாது என்றும், அனைத்து வயது பெண்களையும் கோயிலுக்குள் வழிபட அனுமதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சபரிமலையில் எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
சபரிமலையில் வழிபாட்டு முறைகளில் பாலியல் சமத்துவம் பேணப்பபட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் முடிவு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதைத்தான் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.