பகுதி 7: தானியம் எனும் எமன்!

தானியம் என இங்கே குறிப்பிடுவது அரிசி, கோதுமை, ராகி, கம்பு, சோளம் போன்றவற்றையே.

தானியம் என இங்கே குறிப்பிடுவது அரிசி, கோதுமை, ராகி, கம்பு, சோளம் போன்றவற்றையே. தற்போது கின்வா (Quinoa), ஓட்ஸ், பார்லி போன்ற மேலைநாட்டுத் தானிய வகைகளும் பிரபலமாகி வருகின்றன. இவற்றின் குணங்களில் பெரிய வேறுபாடு இல்லை. எனவே, இந்தத் தானியங்களையும் எமன் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான். 

தானியத்தை எமன் எனக் குறிப்பிடுவதால் பலரும் அதிர்ச்சி அடையலாம். ஏனெனில் இட்லி, தோசை, பணியாரம் போன்ற உணவுகள் நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படுபவை. மேலைநாட்டு மருத்துவமனைகளில், நோயாளிகளுக்குக் காலை உணவாக ரொட்டிகளை வழங்குவார்கள். அதேபோல நம் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குக் காலை உணவாக இட்லியை சாப்பிடச் சொல்வார்கள்.

சர்க்கரை வந்தால் கோதுமை சாப்பிடவேண்டும் என்பது பல சர்க்கரை நோயாளிகளுக்குக் கூறப்படும் அறிவுரை. இதற்குக் காரணம், தமிழக உணவுகள், பெரும்பாலும் அரிசியை அடிப்படையாகக் கொண்டவை. இதன் அடிப்படையில், அரிசிக்குப் பதில் கோதுமையைச் சாப்பிடச் சொன்னால், மக்கள் குறைவாகச் சாப்பிடுவார்கள் என எண்ணி அந்த அறிவுரை வழங்கப்படுகிறது.

இட்லி என்றால் பத்து, பன்னிரண்டு இட்லிகளை விழுங்குபவர்கள் கூட சப்பாத்தி, ரொட்டி என்றால் குறைவாகச் சாப்பிடுவதைக் காணமுடியும். தமிழ்நாட்டில் இப்படி என்றால் வடநாட்டில் என்ன நடக்கும் தெரியுமா? கோதுமையை அடிப்படையாகக் கொண்ட வடநாட்டில், சர்க்கரை நோயாளிகளிடம் கோதுமைக்குப் பதில் அரிசி சாப்பிட அறிவுறுத்தப்படும்! அதே காரணம்தான். அரிசி அவர்களுக்குப் பிடிக்காது என்பதால் குறைவாகச் சாப்பிடுவார்கள்.

நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படும், ஆரோக்கிய உணவு என பலரும் நம்பும் இட்லி, சப்பாத்தியால் உடல்நலனுக்கு எந்த நன்மையும் ஏற்படுவதில்லை. ஆனால், இவற்றினால் ஏற்படும் தீமைகள் அளவற்றவை. மனிதனுக்கு வரும் பல்வேறு வியாதிகளுக்கு இவை காரணமாக அமைகின்றன.

தீட்டிய வெள்ளை அரிசி மற்றும் மைதா போன்றவை கெடுதல் என்பது தமிழ்நாட்டில் உள்ள பலருக்கும் பரவலாகத் தெரிகிற விஷயம். ஆனால் பலரும் இதற்கு மாற்றாக சிறுதானியங்களையும், தீட்டாத முழு தானியங்களையும் தேடிச்செல்கிறார்கள். பல உணவகங்களில் சிறுதானிய உணவுகள் விற்கப்படுகின்றன. சிறுதானிய விழாக்கள் நடைபெறுகின்றன. குதிரைவாலி அரிசி, கைக்குத்தல் அரிசி, கேழ்வரகு அடை, கம்பு புட்டு, சோளதோசை போன்ற கிராம மக்களின் உணவுகள் நகர்ப்புறங்களிலும் பிரபலமாகி வருகின்றன. இங்கே வருத்தத்துடன் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். கைக்குத்தல் அரிசி, கம்பு, ராகி, சோளம், கோதுமை போன்றவை தீட்டிய வெள்ளை அரிசி, மைதாவுக்குச் சமமாக உடலுக்குக் கேடு விளைவிப்பவையே.

தானியங்களை நாம் உண்ண ஆரம்பித்து 10,000 ஆண்டுகளே ஆகின்றன. மனித இனத்தின் வரலாறு 1.6 கோடி ஆண்டுகள் பழமையானது. இந்த 1.6 கோடி ஆண்டுகளில் கடைசி பத்தாயிரம் ஆண்டுகளில் மட்டுமே நாம் அரிசி, கோதுமை, சோளம் போன்றவற்றை உண்ணத் தொடங்கியுள்ளோம். ஆக மனிதனின் 99.99% மரபணுக்கள் - தானியம் சாராமல், விவசாயம் செய்யத் தொடங்கும் முன்பு இருந்த காலகட்டத்தில் அதாவது இறைச்சி, காய்கறிகள் உண்ட காலத்தில் உருவானவை.

அதனால் என்ன? பத்தாயிரம் ஆண்டுகள் போதாதா, நம் மரபணுக்களுக்குத் தானியத்துடன் பரிச்சயம் ஏற்பட என நீங்கள் கேட்கலாம். ஆனால், ஒரு சராசரி மனிதன் வாழும் காலகட்டத்துடன் ஒப்பிட்டால் பத்தாயிரம் ஆண்டுகள் என்பது மிகப்பெரிய கால அளவாகத் தோன்றும். ஆனால், மரபணுக்களைப் பொறுத்தவரை பத்தாயிரம் ஆண்டுகள் என்பது, கண்ணிமைக்கும் பொழுதுக்கே சமமானவை. இந்தப் பத்தாயிரம் ஆண்டு காலகட்டத்தில் நம் மரபணுக்களில் வெகு குறைந்த அளவிலான மாற்றங்களே நிகழ்ந்துள்ளன.

ஒரு சிறிய உதாரணம். சுமார் 42 லட்சம் ஆண்டுகளுக்கு முன்புவரை நாம் நாலு கால் மிருகங்கள்தான். அன்று, நம் முன்னோர்கள் மரங்களில் நான்கு கால்களைப் பயன்படுத்தி கிளைக்குக் கிளை தாவிக்கொண்டிருந்தார்கள். பிறகு, ஏதோ ஒரு காரணத்தால் மனிதன் மரங்களில் இருந்து தரையில் இறங்கி நடக்க ஆரம்பித்தான். தரையில் நான்கு காலில் நடந்தவன், கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு கால்களில் நடக்கவும், மீதமிருக்கும் இரு கால்களைக் கைகளாகவும் பயன்படுத்தத் தொடங்கினான். அதன்பின், முழுக்க இரண்டுகால் பிராணியாக மனிதன் மாறிவிட்டான்.

42 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே, நாம் இரண்டு கால் பிராணியாக மாறிவிட்டாலும் நம் மரபணுக்கள் இன்னமும் அந்த மாற்றத்துக்குப் பழகவில்லை. இதை அறியும்போது உங்களுக்கு வியப்பாக இருக்கிறது இல்லையா!

உதாரணமாக, மனித இனத்தில்தான் பிரசவம் என்பது செத்துப் பிழைக்கும் விஷயமாக இருக்கிறது. மருத்துவ வசதிகள் மேம்பட்ட இந்தக் காலத்தில்தான் பிரசவ மரணங்கள் குறைந்துள்ளன. முன்பெல்லாம் பிரசவத்தை மறுபிழைப்பு என்றுகூட வர்ணிப்பார்கள். பேறுகால மரணங்களுக்கும், பிரசவ சிக்கல்களுக்கும் என்ன காரணம்? நாம் இரண்டு கால்களில் நடக்கத் தொடங்கியதால் உடலில் ஏற்பட்ட மாற்றங்களால் உண்டான விளைவு என விஞ்ஞானிகள் பதிலளிக்கிறார்கள். (ஆதாரம் - http://ngm.nationalgeographic.com/print/2006/07/bipedal-body/ackerman-text) பெண்களின் இடுப்பு எலும்பில் ஏற்பட்ட மாற்றத்தால் பிரசவ சமயத்தில் குழந்தை வெளியே வர அதிக நேரமும், வலியும், சிரமங்களும் ஏற்படுகின்றன. இதே சிம்பன்ஸி, உராங் உடான், கொரில்லா போன்ற பிற குரங்கினங்களுக்கு இந்தச் சிரமங்கள் இல்லை. உதாரணமாக சிம்பன்ஸியின் பிரசவம் சில நிமிடங்களில் முடிந்துவிடும். எந்த வலியும் இன்றி, சில நிமிடங்களில் சிம்பன்ஸி குட்டி, தாயின் கருப்பையிலிருந்து வெளியே வந்துவிடும். தாய் உடனே அதற்குப் பாலூட்டத் தொடங்கும். தாதிமார், மருத்துவர் என யாருடைய உதவியும் சிம்பன்ஸியின் பிரசவத்துக்குத் தேவைப்படாது.

எனவே, 42 லட்சம் ஆண்டுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு மாற்றம், இன்னமும் நம் மரபணுக்களில் சரியாகப் பதிவாகாமல் பாதிப்புகளை உண்டாக்குகின்றன. எனில் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தானிய உணவை உண்ணுதல் எனும் உணவு மாற்றம் நம் மரபணுக்களுக்குப் பழக இன்னும் எத்தனை லட்சம் ஆண்டுகள் ஆகுமோ? யோசித்தால் தலை சுற்றுகிறது இல்லையா? தானிய உணவு என்பது நம் மரபணுக்களுக்கு இன்னமும் பழகாத உணவு. மரபணுக்களுக்குப் பழகாத உணவை உண்பதால் நமக்குப் பல வியாதிகள், ஒவ்வாமைகள் ஏற்படுகின்றன.

தானியங்களின் முதல் தீமை, அதில் உள்ள அதிகப்படியான மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்). மாவுச்சத்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் அதிகரித்து, இன்சுலின் சுரந்து, உடல், கொழுப்பைச் சேகரிக்கத் தொடங்கும் என்பதை முந்தைய அத்தியாயங்களில் கண்டோம். இந்திய அரசு அளிக்கும் புள்ளிவிவரப்படி, சராசரியாக, ஒரு இந்தியர் வருடம் முழுக்க 166 கிலோ தானியத்தை உட்கொள்கிறார். அதாவது தினமும் 400 கிராம் அளவுக்கு அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் நம் உடலில் சேர்கின்றன. இதில் உலக வருட சராசரி 170 கிலோ. இந்தியர்களின் தானிய நுகர்வு உலகின் சராசரி அளவை ஒட்டியே இருக்கிறது. பெரிய வித்தியாசம் இல்லை.

அதே சமயம் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த மக்கள் சராசரியாக வருடத்துக்கு 120 கிலோ தானியங்களையே உட்கொள்கிறார்கள். அவர்களின் உணவில் இறைச்சியே பிரதான இடம் வகிக்கிறது. சராசரி ஐரோப்பியர் வருடத்துக்கு நூறு கிலோ இறைச்சி மற்றும் மீனை உட்கொள்கிறார். ஆனால் இந்தியர்கள், ஒரு வருடத்துக்கு வெறும் ஏழு கிலோ இறைச்சி மற்றும் மீனையே உட்கொள்கிறார்கள். உலக அளவில் மிக, மிக குறைந்த அளவில் இறைச்சி உண்ணும் நாடு – இந்தியா. இந்தியர்கள், புரதத்துக்குப் பருப்பை நம்பியே இருக்கிறார்கள். இங்கு, சராசரியாக வருடத்துக்கு 14 கிலோ பருப்பு ஒருவரால் உண்ணப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் சராசரி தனிமனிதப் பருப்பு நுகர்வு - ஆண்டுக்கு 2 கிலோ மட்டுமே.

இந்தியர்கள், கலோரிகளின் தேவையைப் பெருமளவு தானியங்கள் மூலமாகவே அடைகிறார்கள். சராசரியாகத் தினமும் 400 கிராம் அரிசி, கோதுமை போன்றவை இட்லி, சப்பாத்தி போன்ற உணவுகள் வழியாக நம் உடலை அடைகின்றன. நானூறு கிராம் அரிசியில் 112 கிராம் மாவுச்சத்து உள்ளது. தினமும் 112 கிராம் வெள்ளைச் சர்க்கரை உண்டால் உடலுக்கு என்னென்ன கெடுதல்கள் விளையுமோ அதெல்லாம் இந்த நானூறு கிராம் அரிசி நுகர்வாலும் ஏற்படுகின்றன. மற்றபடி அரிசியில் உள்ள மாவுச்சத்து க்ளுகோஸாக மாறி நம் ரத்தத்தில் கலந்தபின் அதற்கும், வெள்ளை சர்க்கரையில் உள்ள க்ளுகோஸுக்கும் எந்தவித வித்தியாசமும் கிடையாது. அரிசியும், சர்க்கரையும் உடலுக்குள் சென்றபின், இரண்டும் ஒரே அளவில் நம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்கின்றன. இன்சுலின் சுரப்பும் இரண்டுக்கும் ஒரே மாதிரியானதாக இருக்கும்.

சரி, தானியங்களில் மாவுச்சத்து இருப்பதுதானே பிரச்னை எனக் கேட்டால், அது மட்டும் இல்லை எனத் தாராளமாகச் சொல்லமுடியும். 

தானியங்களில் காய்ட்ரோஜன்கள் (Goitrogens) என அழைக்கப்படும் தைராய்டு சுரப்பைத் தடுக்கும் மூலப்பொருள்கள் உள்ளன. உதாரணமாக ராகி, தினை, வரகு, சாமை போன்ற சிறுதானியங்களை எடுத்துக்கொள்வோம்.

சிறுதானியங்களில் உள்ள புரதங்களை ஜீரணிக்க நம் உடல் மிகச் சிரமப்படும். இவற்றில் உள்ள காய்ட்ரோஜன்கள், தைராய்டு சுரப்பியின் (Thyroid Gland) செயல்திறனைக் குறைத்துவிடும். இதன் விளைவாகப் பலருக்கும் ஹைப்போதைராய்டு வியாதி (Hypothyroidism) உண்டாகும். இதனால் உடல் சோர்வடையும், உடல் பருமன் அதிகரிக்கும், குளிரைத் தாங்க முடியாது, ஞாபக சக்தி குறைவடையும். சில சமயம் இதனால் கழுத்தில் பெரிய கட்டிகள்கூட உருவாகும்.

முன்பு, கிராமங்களில் பலருக்கும் கழுத்தில் கட்டிகள் (Goiter) இருப்பதைக் கண்டிருக்க முடியும். அவர்கள் உடலில் போதுமான ஐயோடின் சத்து (Iodine) சேராததால், தைராய்டு சுரப்பிகள் வீங்கிப் பெருத்துவிடும். வரகு, சாமை போன்றவற்றில் உள்ள காய்ட்ரோஜன்கள், நம் உடலில் அயோடின் சத்து சேர்வதைத் தடுத்துவிடும் என்பதும் அறியவேண்டிய தகவல்.

இன்று நகர்ப்புறங்களில் யாரும் வரகு, சாமை போன்றவற்றை அந்தளவுக்கு உண்பதில்லை. ஆனாலும் தைராய்டு சுரப்பிகளில் வரும் இன்னொரு வகை வியாதியான ஹைப்போதைராய்டு வியாதி, நகர்ப்புற மனிதர்களிடம் தென்படக் காரணம் என்ன? இதே காய்ட்ரோஜன்கள், சிறு தானியங்களில் மட்டுமின்றி நிலக்கடலை மற்றும் கோதுமையிலும் உள்ளன. சில பத்தாண்டுகளுக்கு முன்பு யாருமே கேள்விப்பட்டிராத நிலக்கடலை வெண்ணெயின் (Peanut butter) பயன்பாடு இன்று நகர்ப்புறங்களில் அதிகமாகி வருகிறது. இவற்றின் நுகர்வு அதிகரிக்க, அதிகரிக்க ஹைப்போதைராய்டு வியாதியின் பாதிப்பையும் இனி அதிகமாகக் காணமுடியும்.

சர்க்கரை நோயாளிகளின் உணவாகக் கருதப்படுவது சப்பாத்தி. தானியங்களிலேயே மிகக் கெடுதலான தானியம் – கோதுமை. கோதுமையை விடவும் மிகக் கெடுதலான உணவு உலகில் ஏதேனும் உண்டா என்று சந்தேகிக்கும் அளவுக்கு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். முழு தானிய கோதுமை (Whole grain wheat), சர்க்கரை, அரிசி, மைதா போன்றவை எல்லாம் ஒரே அளவிலேயே நம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஏற்றுகின்றன. வெள்ளைச் சர்க்கரை ஆரோக்கியமான உணவு, சர்க்கரை நோயாளிகள் உண்ணக்கூடிய உணவு எனக் கூறினால் அது எப்படி நகைப்புக்குரியதாக இருக்குமோ அதுபோல தான் கோதுமை, சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு என்பதும்.

கோதுமையில் உள்ள மாவுச்சத்தைத் தாண்டி, காய்ட்ரோஜன்களைத் தாண்டி அதில் உள்ள தீமை விளைவிக்கும் புரதம் - க்ளூடன் (Gluten). கோதுமையில் உள்ள க்ளூடன் வகைப் புரதத்தின் தீமைகள் பற்றிய ஆய்வுகள் ஒவ்வொன்றும் அச்சமூட்டுகின்றன. கோதுமை தவிர பார்லி போன்ற தானியங்களிலும் க்ளூடன் காணப்படுகிறது. க்ளூடன் புரதத்தால் பாதிப்படையாத உடல் உறுப்பு ஏதேனும் இருக்கிறதா என்பது சந்தேகமே. மூளை, இதயம், கிட்னி, நரம்பு, நோய் எதிர்ப்பு சக்தி... அவ்வளவு ஏன் நம் கைகால் விரல், நகங்கள் முதல் முடி வரை அனைத்துமே க்ளூடனால் பாதிப்படைவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

மாரடைப்பை வரவழைக்க காரணமாக இருப்பது உள்காயமே என சென்றவாரப் பதிவில் கண்டோம். உடல் உறுப்புகளில் உள்காயம் உள்ளவர்களில், 80% பேர் க்ளூடன் புரதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. க்ளூடனால் உண்டாகும் உள்காயம் நம் இதய நரம்புகள் முதல் மூட்டுகள், எலும்புகள், நரம்புகள், பெரும்குடல் ஆகிய பல பகுதிகளில் புண்களை உண்டாக்குகிறது. இதனால் ஏற்படும் சிக்கல்கள் - மாரடைப்பு, முடக்குவாதம், பெரும்குடல் சவ்வுகள் கிழிதல், ஜீரணக் குறைபாடுகள், தாள இயலாத வயிற்றுவலி, தொடர் வயிற்றுபோக்கு. கடைசியில் உள்ள பிரச்னைகள் தொடர்ந்தால் வயிற்றில் அல்சர் உருவாகும்.

உள்காயத்தால் வரும் வியாதிகள் எண்ணற்றவை. அல்சைமர் (Alzheimer’s disease) எனப்படும் ஞாபக மறதி வியாதி, பார்க்கின்சன் (Parkinson’s disease) எனப்படும் நரம்புமண்டல வியாதி ஆகியவை உள்காயத்தால் உருவாகின்றன. ஆக, உள்காயத்தை உருவாக்கும் க்ளூடன் புரதத்தால் நமக்கு வரக்கூடிய வியாதிகளின் எண்ணிக்கைக்கு கணக்கு, வழக்கு எதுவும் கிடையாது.

இது தவிர நம் ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் தொடர்ந்து அதிகமாக இருந்தால் மூளையில் பெரும் பாதிப்புகள் உண்டாகும். சர்க்கரை அளவுகளால் மூளையில் ஏற்படும் பாதிப்பே அல்சைமர் வியாதிக்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சியின் வழியாகச் சொல்கிறார்கள். தினமும் மூன்று வேளை மாவுச்சத்து நிரம்பிய தானியங்களை உண்பது மூளையின் அமைப்பையே சிதைத்து, மூளையின் அளவையும், செயல்திறனையும் குறைத்துவிடும்.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தானிய உணவை மனிதன் உண்ணாதபோது கிடைத்த எலும்புக்கூடுகளைத் தானியம் உண்ணத் தொடங்கிய காலகட்ட எலும்புக்கூடுகளுடன் ஒப்பிட்டபோது பெரும் வித்தியாசம் தென்பட்டது. தானியங்களை உண்ணத் தொடங்கியபிறகு சராசரி மனித உயரம் அரை அடி குறைந்து போனது. மூளையின் அளவும் குறைந்துள்ளது. பற்கள் கடுமையாகச் சீர்கெட்டன. தானியங்களை உண்ணாத ஆதிமனிதன் பற்பசை கொண்டு பல் துலக்கவில்லை, தற்போது பல ரகங்களில் கிடைக்கும் பற்பசைகளும், அவை அளிக்கும் பாதுகாப்பு வளையமும் அன்று இல்லை. (பல் மருத்துவர்களும் கிடையாதுதான்.) ஆனால் பல்கூட துலக்காத ஆதிமனிதனின் பற்களில் சொத்தை, ஓட்டைகள் போன்றவை வெகு, வெகு சொற்பமாகவே இருந்தன.

ஆனால் நம் உணவில் தானியங்கள் சேரத் தொடங்கிய பிறகு, பற்களில் கடும் சேதாரங்களும், சொத்தைகளும், பல் வியாதிகளும் ஏற்பட ஆரம்பித்தன. தானியங்களில் உள்ள மாவுச்சத்தை நம் பற்களால் அரைக்கும்போது பற்கள் முழுக்க மாவுச்சத்து பரவுகிறது. மாவுச்சத்தில் உள்ள சர்க்கரை, பற்களின் எனாமலை (பல்லின் மேல் இருக்கும் வெள்ளை நிறப் பகுதி ) கரைக்கும் தன்மை கொண்டது. பலவகை நுண்ணுயிரிகளுக்கும் சர்க்கரை விருப்ப உணவு என்பதால் அவை நம் பல்லில் குடியேறுகின்றன. பாக்டீரியா பாதிப்பால் சொத்தைப் பற்கள், பல் வியாதிகள் போன்றவை உண்டாகின்றன.

இவை எல்லாவற்றையும் விட க்ளூடன் போன்ற தானியப் புரதங்களால் நோய் எதிர்ப்பு சக்தி சார்ந்த வியாதிகள் (Autoimmune diseases) உருவாகின்றன. குறிப்பாக இன்று பலருக்கும் சொரியாசிஸ் (psoriasis) என்கிற தோல்வியாதிகள் வருகின்றன. சொரியாசிஸ் வந்தால் தோலெங்கும் கொடிய புண்கள் தோன்றும். உடலெங்கும் சிகப்புத் திட்டுக்கள் பரவும். இந்த இடங்களை சொறிய, சொறிய வலி மேலும் அதிகரிக்கும்.

சொரியாசிஸ் போன்ற தோல்வியாதிகளுக்குக் காரணம் தானியங்களே. தானியங்களில் உள்ள புரதத்தை நம் மரபணுக்கள் ஏற்பதில்லை. அதை ஏதோ நோயை ஏற்படுத்தும் பாக்டீரியா அல்லது வைரஸ் என நினைத்து நம் நோய் எதிர்ப்பு சக்தி உடனே செயலில் இறங்கி நம் உடல் உறுப்புக்கள் மேலேயே தாக்குதல் நடத்துகிறது. வீட்டில் காவலுக்கு இருக்கும் காவலாளியே வீட்டுக்குள் திருடன் நுழைந்ததாக நினைத்து வீட்டுக்குள் துப்பாக்கியால் சுடுவதற்கு ஒப்பானது இது. இதனால் உடலெங்கும் புண்களும், உள்காயமும் ஏற்பட்டு சொரியாசிஸ் எனும் தோல்வியாதி வருகிறது. இதைக் குணபடுத்த முடியாமல் மக்கள் காசு கொடுத்து பல மருந்துகளை வாங்கி உண்கிறார்கள். களிம்புகளை வாங்கி பூசுகிறார்கள். காசு கரைகிறதே ஒழிய நோய் குணமாவதில்லை.

சொரியாசிஸ் போன்ற தோல்வியாதிகள் குணமாக்க முடியாதவை என பலரும் நம்புகிறார்கள். இது முழுக்க தவறான முடிவு. தானியம் தவிர்க்கும் பேலியோ டயட்டால் சொரியாசிஸ் போன்ற வியாதிகளை நிச்சயம் குணமாக்க முடியும். நம் மரபு சார்ந்தவை, கலாசாரம் சார்ந்தவை, பலவகை நோய்களுக்கான தீர்வு என நினைத்து உட்கொள்ளும் தானியங்களே இதுபோன்ற கடும் விளைவுகளை உடலில் ஏற்படுத்தி பல வியாதிகளுக்கும் காரணமாகிவிடுகின்றன. அவ்வகைத் தானியங்களை எமன் என அழைப்பது பொருத்தம்தானே?

*****

வாசகர்களே, பேலியோ டயட் குறித்த உங்கள் சந்தேகங்களை askdinamani@dinamani.com என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். முக்கியமான கேள்விகளுக்கு இத்தொடரின் ஓர் அத்தியாயத்தில் நியாண்டர் செல்வன் பதிலளிப்பார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com