26. கிருமிகள் வாழ்க! - 3

எண்ணிலடங்காத கோடிக்கணக்கான கிருமிகள் நம் ஒவ்வொருவர் உடலுக்குள்ளும் இருக்கின்றன! நமது உடலே கிருமிகளால் ஆக்கப்பட்டதுதான் என்றுகூடச் சொல்லிவிடலாம். கிருமிகளின்றி அமையாது உலகு என்றார் ஹீலர் உமர்.
உங்கள் கைகளை கழுவிக்கொள்ளுங்கள். பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். ஏனெனில், இயேசுவும் கிருமிகளும் இல்லாத இடமே இல்லை – யாரோ.

எங்கெங்கும்…

இணையத்தில் கிடைத்த இந்த மேற்கோளில் இயேசுவையும் கிருமியையும் ஒன்றாக இணைத்துச் சொல்லப்பட்டுள்ளது. இது மத நம்பிக்கையாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். ஏற்படுத்தினால், கிருமிகளை அவர்கள் குட்டிச்சாத்தான்களாகப் பார்க்கிறார்கள் என்று அர்த்தம். ஒருவேளை எந்தக் கேள்வியும் இன்றி இந்த மேற்கோளை அவர்கள் மனம் ஏற்றுக்கொள்ளுமானால், கிருமிகளைப் பற்றிய சரியான கருத்தையே அவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்! கடவுளும் கிருமியும் ஒன்றா என்று நீங்கள் கேட்கலாம். இது ஒப்புமை அல்ல. கடவுளைப்போல, காற்றைப்போல, கிருமிகளும் எங்குமிருக்கின்றன என்ற புரிந்துகொள்ளல். அவ்வளவுதான்.

நீரில், நிலத்தில், ஆகாயத்தில் என்று கிருமிகள் எங்கும் வாழ்கின்றன என்று பார்த்தோம். கோடிக்கணக்கான கிருமிகள் இருக்கின்றன என்றும், அவற்றில் 85 லட்சம் வகை உள்ளன என்றும், அவற்றில் மனிதர்களுக்குத் தீமை செய்பவை ஐந்து சதவீதத்துக்கும் குறைவானவையே என்றும், இந்தப் பிரபஞ்சத்தில் ஒன்றை இன்னொன்றாக மாற்றும் அவசியமான இயற்கை நிகழ்வுக்கு (biotransformation / microbial metabolism) உதவுகின்றன என்றும் பார்த்தோம்.

எங்கும் நிறைந்திருக்கும் கிருமிகள் நம் உடம்புக்குள்ளும் இருக்குமல்லவா? ஆம். இருக்கின்றன. அதுவும் கோடிக்கணக்கில்! தொன்னூறு ட்ரில்லியன் கிருமிகள் ஒரு மனித உடலுக்குள் இருப்பதாக ஒரு குத்துமதிப்பான கணக்கு சொல்கிறது! ஒரு உயிரணு இருந்தால் அதற்குப் பகரமாக பத்து கிருமிகள் இருக்குமாம்!

லட்சம், கோடி என்றால் நமக்குத் தெரியும். மில்லியன், பில்லியன், டிரில்லியன் எல்லாம் மேற்கத்திய உலகின் எண்ணிக்கை அளவுகள். ஒரு மில்லியன் எனில் பத்து லட்சம். ஒரு பில்லியன் எனில் நூறு கோடி! ஒரு டிரில்லியன் என்றால் ஒரு லட்சம் கோடி! அப்போ, 90 ட்ரில்லியன் என்றால்! தலை சுற்றுகிறது! எண்ணிலடங்காத கோடிக்கணக்கான கிருமிகள் நம் ஒவ்வொருவர் உடலுக்குள்ளும் இருக்கின்றன! நமது உடலே கிருமிகளால் ஆக்கப்பட்டதுதான் என்றுகூடச் சொல்லிவிடலாம். கிருமிகளின்றி அமையாது உலகு என்றார் ஹீலர் உமர். நான் சொல்கிறேன், கிருமிகளின்றி அமையாது உடல்!

கிருமித் தொழில்

இவ்வளவு கிருமிகளும் நம் உடம்புக்குள் எதற்காகக் குடியிருக்கின்றன? கிருமிகளெல்லாம் தீமைதான் செய்யுமென்றால், இந்நேரம் மனித குலமே அழிந்துபோயிருக்க வேண்டுமே! ஆனால் அப்படி ஒன்று நடக்கவில்லையே! அப்படியானால் கிருமிகள் நம் உடலில் என்னதான் செய்கின்றன?

இந்தப் பிரபஞ்சத்தில் செய்யும் அதே வேலையைத்தான் நம் உடலுக்குள்ளும் செய்துகொண்டுள்ளன! அதுதான் ஏற்கெனவே சொன்னேனே, ஒன்றை இன்னொன்றாக மாற்றுகின்ற வேலை. இன்னொரு வகையில் சொன்னால், கெட்டதையெல்லாம் நல்லதாக மாற்றும் வேலை! ஆமாம். அதைத்தான் அனுதினமும், கணந்தோறும் அவை செய்துகொண்டே இருக்கின்றன. நம்மால் அவற்றுக்கு நன்றி என்று ஒரு வார்த்தைகூடச் சொல்லமுடியாது. ஏன்? ஒவ்வொரு கிருமிக்கும் ‘நன்றி’ என்று சொல்லவேண்டுமானால், நாம் பல கோடி ஆண்டுகள் வாழ்பவராக இருக்க வேண்டும். அப்போதுகூட அது சாத்தியமா என்பது சந்தேகமே!

அப்படி என்ன நன்மைகளை அவை நமக்குச் செய்கின்றன?

ஒரு முக்கிய உதாரணத்தை மட்டும் சொல்கிறேன். ஒரு கிருமிக் கோடு மட்டும்தான் இங்கே போடமுடியும். கிருமி ரோட்டை நீங்கள்தான் போட்டுக்கொள்ள வேண்டும்!

கார்பன்-டை-ஆக்ஸைடு உள்ளதல்லவா? அதில் கார்பனும் ஆக்ஸிஜனும் உள்ளன. ஆனால், நாம் உயிர்வாழத் தேவை ஆக்ஸிஜன் மட்டும்தான். கார்பன்-டை-ஆக்ஸைடிலிருந்து அந்த ஆக்ஸிஜனைப் பிரித்தெடுத்துக் கொடுப்பது கிருமிகள்தான்! அப்படியானால், நாம் உயிர் வாழ்வதற்குக் காரணமே கிருமிகள்தான்!

மேற்கொண்டு பார்ப்பதற்கு முன், முக்கியமான இரண்டு கிருமி வகைகளைப் பற்றிக் கொஞ்சம் பார்த்துவிடலாம்.

கிருமிகளின் வகைகள்

உலகில் 85 லட்சம் வகைக் கிருமிகள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் மிகமுக்கியமானவையாக இருப்பவை பாக்டீரியாவும் வைரஸும்தான். பல நோய்களுக்கும் காரணம் வைரஸ்தான் என்று திரும்பத் திரும்பச் சொல்லிச்சொல்லி நாம் மூளைச்சலைவை செய்யப்பட்டுள்ளோம். எனவே, அவை பற்றிய உண்மையை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

பாக்டீரியா, வைரஸ் என்று உலகில் உள்ள எந்தக் கிருமியையும் நம் கண்களால் பார்க்கமுடியாது. ஆனால், வைரஸைவிட பாக்டீரியா அளவில் பெரியது. அதனால், அதைமட்டும் எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் வழியாகப் பார்க்கமுடியும். ஆனால், வைரஸை எந்த மைக்ராஸ்கோப்பாலும் பார்க்கமுடியாது. அவ்வளவு சின்னது அது. இதுபற்றி ஏற்கெனவே கொஞ்சம் பார்த்தோம்.

பிசுபிசுப்பான களிமண்ணில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அதில் கொஞ்சம் பாக்டீரியாவை விட்டு வளர்க்கமுடியும். இது ‘பாக்டீரியல் கல்ச்சர்’ என்று அறியப்படுகிறது. ‘மைக்ரோபயாலஜி லாப்’களில் மாணவ மாணவிகள் இக்காரியம் செய்துகொண்டிருப்பதைப் பார்க்கலாம். ஒருமுறை நான்கூட தெரியாமல் ஒரு பாக்டீரியல் கல்ச்சர் தட்டில் கை வைத்துவிட்டேன். ‘சார், சார், கையை டெட்டால் போட்டுக் கழுவிக்கொள்ளுங்கள்’ என்று அறிவுரை சொன்னார்கள். நான் எதுவும் செய்யவில்லை என்பது வேறு விஷயம். இப்போது மீண்டும் பாக்டீரியாவுக்கு வரலாம்.

அந்தக் களிமண்ணையும் நீரையும் தனித்தனியாக வடிகட்டிப் பார்த்தால், அந்தக் களிமண்ணில் பாக்டீரியாக்கள் தங்கியிருப்பதைப் பார்க்கமுடியும். ஆனால், வடிகட்டப்பட்ட நீரில் அது இருக்காது. ஆனால், இதே மாதிரியான பரிசோதனையை வைரஸை வைத்துச் செய்தால், களிமண்ணில் வைரஸ் தங்காது. நீரின் வழியாகக் கீழே இறங்கிவிடும்.

அப்படிக் கீழே இறங்கிய வைரஸ் உள்ள நீரைக் காயவைத்தால், அதில் வைரஸ் உறைந்திருக்கும். எகிப்திய ‘மம்மி’ மாதிரி வைரஸ் ‘மம்மி’ கிடைக்கும். அந்த வைரஸ் படிமத்தை எப்போது நீரில் கலந்தாலும் மம்மிக்கு மீண்டும் உயிர் வந்துவிடும்! ‘மம்மி ரிடர்ன்ஸ்’ என்பதுபோல!

கிருமி போஜனம்

இப்படிச் சொன்னவுடன், ‘அந்நியன்’ படம் நினைவுக்கு வருகிறதா?! ஆனால், உணவு என்ற அர்த்தத்தில் மட்டுமே நான் இங்கே பேசுகிறேன். ரொம்பக் கஷ்டப்பட்டு உயிரைத் தக்கவைத்துக்கொள்ளும் கிருமிகளின் உணவுதான் என்ன? நமக்கு இட்லி, தோசை, பிரியாணி, இனிப்பு, ஐஸ்க்ரீம், பர்கர், பிட்ஸா என விருப்ப உணவு வகைகள் அதிகம். நாளுக்கு நாள் அவற்றின் வகையும் அளவும் கூடிக்கொண்டே போகும் வாய்ப்பு உண்டு! ஆனால், நம்மை வாழவைக்கும் கிருமிகளின் உணவு ஒரே வகைதான். அதன் பெயர் கழிவு!

ஆமாம். நாம் வேண்டாமென்று தூக்கிப்போடும் மிச்சம் மீதியைக் கழிவுகள் என்கிறோம். அதேபோல, உயிர்ச்சத்துகளையெல்லாம் உறிஞ்சிக்கொண்டு, நம் உடல் வேண்டாம் என்று வெளித்தள்ளும் அனைத்தும் கழிவுகளே. ஹார்பிக் விளம்பரத்தில் டாய்லட்டில் ஹார்பிக் ஊற்றியவுடன் ஆ, ஊ என்று அலறிக்கொண்டு கிருமிகள் ஓடி மறையும் காட்சி நினைவுக்கு வருகிறதா? விளம்பரத்தில் கிருமிகள் கண்ணுக்குத் தெரிவதுபோலக் காட்டியது பொய். ஆனால், கழிவுகளை உண்டு அவை உயிர் வாழும் என்ற குறிப்பு சரி.

இக்கழிவுகள், சாதாரணக் கழிவுகள், வேதியியல் கழிவுகள், அழுகிய கழிவுகள் என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். மூன்றாம் வகைக் கழிவுகளைப் பற்றி நாம் விரிவாகப் பார்க்க இருக்கிறோம். ஏனெனில், அவை நம் உடலில் இருப்பதால்தான் நமக்குப் பலவிதமான நோய்கள் வருகின்றன. அக்கழிவுகளை உணவாக உண்டு கிருமிகள் நம்மை அந்நோய்களில் இருந்து காப்பாற்றுகின்றன!

ஆனால் நாம் என்ன செய்கிறோம்? கிருமிகள் என்றாலே அவை தீமை மட்டுமே செய்யும் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். அப்படி நம்புவதுதான் அறிவியல் என்றும் நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். அதனால்தான், குழந்தைகளுக்குக் கூட ‘ஆண்ட்டிபயாடிக்ஸ்’ (antibiotics) எனப்படும் நுண்ணுயிர்க்கொல்லிகளைக் கொடுத்து விழுங்கவைக்கிறோம்.

இந்த ஆண்ட்டிபயாடிக்ஸ் என்ன செய்யும்? ‘ஆண்ட்டி’ என்றால் ‘எதிரான’ என்றும், ‘பயோ’ என்றால் ‘உயிர்தொடர்பான’ என்றும் அர்த்தம். ‘ஆண்ட்டிபயாடிக்ஸ்’ என்றால் உயிருக்கு எதிரான ஒரு மாத்திரை என்று பொருள். அதாவது, உயிரைக் கொல்லக்கூடியது. யாருடைய உயிரை? கிருமியின் உயிரை?

சரி, உள்ளேபோகும் நுண்ணியிர்க்கொல்லி மாத்திரைகளுக்கு நல்ல கிருமி எது, கெட்ட கிருமி எது என்று பிரித்தறியத் தெரியுமா? நல்லது கெட்டதை பிரித்தறியும் அறிவு மனிதர்களுக்கே குறைந்துகொண்டு வரும்போது, மாத்திரைக்கு அறிவிருக்குமா என்ன?! தீவிரவாதியைப்போல முகமூடி அணிந்துகொண்டு ஒரு குழந்தை வந்தாலும். அதைத் தீவிரவாதியாக நினைத்து சுட்டுக்கொல்லும் ஒரு முட்டாளைப் போலத்தான் அது செயல்படும். ஆமாம். விழுங்கப்பட்ட ஆண்ட்டிபயாடிக்குகள் உடலுக்குள் சென்று அதன் கண்ணில் படும் கிருமிகளையெல்லாம் கொன்றுவிடும்!

தாஜ்மஹாலை அல்லது துருக்கியில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஹேகியா சோஃபியா தேவாலயத்தைக் கட்டிக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கானவர்களில் ஒரு சிலர் கல்லைத் திருடி விற்றார்கள் என்பதற்காக, எல்லோரையும் வாளால் வெட்டிக்கொன்றுவிட்டால் என்னாகும்? நமக்குத் தாஜ்மஹாலும் கிடைத்திருக்காது, ஹேகியா சோஃபியாவும் கிடைத்திருக்காது. அப்படி ஒரு முட்டாள்தனத்தைத்தான் ‘ஆண்ட்டிபயாடிக்ஸ்’ உட்கொள்ளும்போது நாம் செய்கிறோம்.

ஹேகியா சோஃபியா

நம் உடம்பிலிருக்கும் கோடிக்கணக்கான கிருமிகளில் ஒரு சில மட்டுமே நமக்குத் தீமை செய்ய வல்லவை. அதுவும், நம் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தால் மட்டுமே சாத்தியம். ஆனால், இந்த மாத்திரைகள் என்ன செய்கின்றன? போகும் வழியில் தென்படும் எல்லாக் கிருமிகளையும் சகட்டுமேனிக்குச் சாகடித்துவிடுகின்றன.

லட்சக்கணக்கான நல்ல கிருமிகள் செத்துப்போவதால், அவை செய்துகொண்டிருந்த வேலைகளெல்லாம் அப்படியே நிற்கும்! அதனால் ஏற்படும் பின்விளைவுகளைத்தான் நாம் ‘‘மருந்துகளின் பின்விளைவுகள் என்று அழைக்கிறோம்” என்கிறார் ஹீலர் உமர்! அதோடு, சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சிறப்பு மருத்துவ மாநாட்டில், குழந்தைகளுக்கு ‘ஆண்ட்டிபயாடிக்ஸ்’ கொடுக்கக்கூடாது என்று ஆங்கில மருத்துவர்களே முடிவெடுத்தனர் என்ற முக்கியத் தகவலையும் அவர் தருகிறார் (பக்கம் 21).

கிருமிகள் செய்யும் தீமையைத் தடுப்பது எப்படி

மிகக்குறைந்த அளவிலான கிருமிகள், மனிதர்களுக்குத் தீமை செய்கின்றன என்பது உண்மைதான். அப்படி கிருமியால் ஒரு பாதிப்பு நமக்கு வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்? மூன்று வழிகள் உள்ளன.

  1. தீமை செய்யும் கிருமிகள் நம் உடலுக்குள் இருக்கின்றன என்பது உறுதி செய்யப்பட்டால், அவற்றுக்கு விஷம் வைத்துக் கொல்லலாம். அதாவது, ஆங்கில மருந்துகளை உட்கொள்ளலாம்!
  2. உலகில் உள்ள தீமை செய்யும் கிருமிகள் அனைத்தையும் அழித்துவிடலாம். அப்போது யாருக்கும் கிருமிகளால் தீமையே ஏற்படாதல்லவா? ஆனால் பாவம், நமக்கு இது சாத்தியமே இல்லை!
  3. தீமை செய்யும் கிருமிகள் நுழையமுடியாத அளவுக்கு நம் எதிர்ப்பு சக்தியை பலமாக வைத்துக்கொள்ளலாம்.

கிருமிகளைப் பற்றி நமக்குத் தெரியவேண்டியதில்லை. ஆனால் எதிர்ப்பு சக்தி பற்றித் தெரிந்துகொண்டு அதை பலப்படுத்தினால் போதும். ஹீலர் உமர் தன் நூலில் ஒரு அழகான கதையைச் சொல்கிறார்.

ஒரு வேதியியல் பேராசிரியர், அமிலங்களைப் பற்றிப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ஒரு குடுவையில் இருந்த அமிலத்தைக் காட்டி, இது அரிக்கும் தன்மையுடையதா இல்லையா என்று கேட்டார். யாரும் பதில் சொல்லவில்லை. ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து, ‘இதை நான் இப்போது இந்த அமிலம் உள்ள குடுவையில் போடப்போகிறேன். இந்தக் காசை இந்த அமிலம் அரித்துக் கரைத்துவிடுமா, கரைக்காதா?’ என்று கேட்டார். ஒரு மாணவர் மட்டும் கையை உயர்த்தினார். சொல் என்று பேராசிரியர் அனுமதி கொடுத்ததும், ‘அந்தக் காசு அந்த அமிலத்தில் கரையாது’ என்று மாணவர் சொன்னார்.

சந்தோஷப்பட்ட பேராசிரியர், ‘எப்படிக் கண்டுபிடித்தாய்? இந்த அமிலம் பற்றி உனக்கு மேற்கொண்டு என்னென்ன தெரியும் சொல்லு’ என்றார்.

‘சார், இந்த அமிலம் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால், உங்களைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். அந்தக் காசு உண்மையிலேயே அந்த அமிலத்தில் கரையுமானால், அதை உள்ளே போட நீங்கள் நிச்சயம் முன்வந்திருக்கமாட்டீர்கள்’ என்றான்!

ஆஹா, ஒன்று அமிலத்தைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும், அல்லது ஆசிரியரைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும்! ஒன்று கிருமிகளைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும், அல்லது நம் உடலின் எதிர்ப்பு சக்தியைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும், அவ்வளவுதான்! ஆமாம். நம் உடலின் எதிர்ப்பு சக்தி சரியாக, பலமாக இருக்குமானால், தீமை செய்யும் கிருமிகள் நம் உடலுக்குள் புக முடியாது. எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களையும், பலவீனமானவர்களையும்தான் வைரஸ்களும் பாக்டீரியாக்களும் பாதிக்கும்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களும், செயல்பாடுகளும் நமக்கு இருக்குமானால் அதுவே போதும். கிருமிகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. இதுதான் எளிமையான, நமக்குச் சாத்தியமான வழியுமாகும். கோடிக்கணக்கான கிருமிகளில் எவையெவை தீமை செய்பவை என்று கண்டுபிடித்து, அவை ஒவ்வொன்றுக்கும் விஷம் கொடுத்து கொன்றுகொண்டிருக்கத் தேவையில்லை. அப்படிச் செய்வது சாத்தியமும் இல்லை.

மருந்துக் கம்பெனிகளுக்கு நம் மீது எந்த அக்கறையும் இருக்க வாய்ப்பே இல்லை. அப்படி நினைப்பதுகூட அபத்தமானதே. ஒரு புதிய மருந்தைக் கண்டுபிடித்து உருவாக்குவதற்கு சுமாராக 1600 கோடி ரூபாய் தேவைப்படுகிறதாம்! அவ்வளவு செலவு செய்து ஒரு மருந்தைத் தயாரிக்கும் ஒரு கம்பெனி அதை லாபத்துடன் விற்பனை செய்வதைப் பற்றி யோசிக்குமா அல்லது நம் வீட்டு இட்லி தோசையின் மூலமாகவே நம் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த முடியும் என்று யோசனை சொல்லுமா! நாம்தான் யோசிக்க வேண்டும்.

இரண்டு காரியங்கள் தம் முன்னே இருந்தால், அதில் எது இலகுவானதோ, எது எளிமையானதோ அதையே நபிகள் நாயகம் தேர்ந்தெடுத்துக்கொள்வார்களாம். தீமை செய்யும் கிருமிகள், எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவது என்ற இரண்டு காரியங்களில் மனிதர்களால் செய்ய முடிகிற இலகுவான, எளிமையான காரியம் பின்னதுதான். இந்த விஷயத்தில் நாம் நபிகள் நாயகத்தின் ஞானத்தைப் பின்பற்றலாமே!

கிருமிகள் நம் உடலுக்குள் நிகழ்த்தும் அற்புதத்தை அறிந்துகொண்டால், அவற்றின் மீது நமக்கு ஒரு மரியாதையே வந்துவிடும். அதற்கு முன், கிருமிகளைப் பற்றிய விஞ்ஞானப்பூர்வமான வரலாற்றுப் பொய்களைக் கொஞ்சம் பார்க்கவேண்டி உள்ளது. பார்த்துவிடலாமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com