தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அந்தோணியார் கோவில் பிரதிஷ்டைக்குச் செல்ல மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லிடைக்குறிச்சியில் மதிமுக பொதுச் செயலர் வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கல்லிடைக்குறிச்சியில் திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ரயில் நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றினார். அப்போது செய்தியாளர்களிடம் கூறியது, நீதிக் கட்சியை கட்டமைத்த தலைவர்களுள் ஒருவரான டி.எம் நாயருக்கு சிலை வைக்க மதிமுக முயற்சி எடுத்து வருகிறது.
இதற்கு தமிழக அரசு இடம் அளிக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட கட்சத்தீவில் 1905 ல் சீனிகுப்பம் படையாட்சி என்பவர் அந்தோனியார் கோவிலை கட்டினார். 1974 ல் இந்திரா காந்தி இலங்கைக்கு கச்சத்தீவை தாரைவார்க்கும் போது கலைஞர் எதிர்ப்புத் தெரிவித்து தடுக்க தவறி விட்டார். அதனால் இன்று நம் மீனவர்கள் அந்த பகுதிக்குச் சென்றால் சிங்களர்களால் தாக்கப்படுகிறார்கள்.
அந்தோணியார் கோவிலை சிங்கள அரசு விஸ்தரித்து கட்ட முயற்சித்த போது தமிழக அரசும் சேர்ந்து கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய போது மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இப்போது,கோவில் கட்டி முடிக்கப்பட்டு 7 ம் தேதி திறப்பு விழா நடைபெறுகிறது. இதற்கு தமிழகத் தலைவர்கள் மீனவர்கள் யாருக்கும் அழைப்பில்லை.
அந்தோணியார் கோவிலுக்கு செல்ல இலங்கை தடை விதித்தால் மத்திய அரசு உடனே தலையிட்டு மீன்வர்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதிக்காவிட்டால் நாங்கள் படகுகளில் செல்வோம் என தமிழக மீனவர்கள் கூறி இருக்கிறார்கள். மீறி படகுகளில் செல்பவர்களை சிங்களர்கள் தாக்கினால் முழுபொறுப்பையும் மத்திய அரசு ஏற்கவேண்டும்.
எனவே உடனடியாக இலங்கை அரசை தொடர்பு கொண்டு தமிழக மீனவர்களை அனுமதிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மோடியின் கருப்புப் பணம் குறித்த அறிவிப்பால் ஏழைமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. மோடியின் அந்த அறிவிப்பை வரவேற்கிறேன் என்றார்.