புதுதில்லி
தில்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 54 ரயில்கள் மற்றும் 9 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
தில்லியில் கடந்த சில நாட்களாகவே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. சாலைகளில் செல்லும் வாகனங்கள் தெளிவாக தெரியாததால், பகல் நேரங்களில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டுச் செல்கின்றனர். இதேபோல் ரயில் மற்றும் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று 54 ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 12 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த தகவல்களை ஐ.ஆர்.சி.டிசி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இதேபோல் 4 சர்வதேச விமானங்களும், 5 உள்ளூர் விமானங்களும் தாமதமாக இயக்கப்படும் என்று இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் டெல்லி-ஐதராபாத் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.