ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில் ஆறாவது ஆண்டாக ஆசியாவின் இதயம் மாநாடு நடத்தப்படுகிறது.
இந்தாண்டுக்கான ஆசியாவின் இதயம் மாநாடு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான அமிர்தசரஸ் நகரில் நேற்று சனிக்கிழமை தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபறும் இந்த மாநாட்டில் ரஷியா, சீனா, துருக்கி உள்பட சார்க் அமைப்பில் இடம்பெற்றுள்ள 14 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும், அமெரிக்கா உள்ளிட்ட 17 இதர நாடுகளைச் சேர்ந்த உயரதிகாரிகளும் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இம்மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி பயங்கரவாதத்தை ஒழிக்க ஆப்கானுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும் என மோடி உறுதி அளித்துள்ளார். மேலும் அவர் பேசும் போது கூறியதாவது: -
ஆப்கான் அதிபர் அஸ்ரப் உடன் இணைந்து மாநாட்டை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மாநாடு நடக்கும் அமிர்தசரஸ் தேச பக்தர்களின் பூமி. நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே உலக நாடுகள் அனைத்தும் ஆப்கான் மீது கவனம் செலுத்துகின்றன.
ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்புவதே தற்போதைய தேவையாகும். ஆப்கானிஸ்தானுக்கு தீவிரவாதம் ஒரு அச்சுறுத்தலாக உள்ளது. நாம் அமைதியாக இருந்தால் தீவிரவாதம் வலுப்பெற்று விடும்
ஆசிய பிராந்தியத்தில் தீவிரவாதத்தை ஒன்றிணைந்து விரட்ட வேண்டும். ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் அரசியல் உறுதி தன்மை உத்திரவாதம் செய்ய மோடி உறுதி அளித்துள்ளார்.
இந்தியாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்த ஆப்கானுக்கு பெரும் வாய்ப்புள்ளது என்றும் காபூலில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம் ஆப்கான்-இந்தியா உறவை பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார்.