வங்கக்கடலில் வர்தா புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறியுள்ளது. வர்தா என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது விசாகப்பட்டினத்தில் இருந்து 1,060 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என்றும் இதன் காரணமாக ஆந்திராவில் வரும் 11-ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வர்தா புயல் காரணமாக 11, 12 ஆகிய தேதிகளில் கடலோரப் பகுதிகள் உள்ளிட்ட வடதமிழகத்தில் பலத்த மழை வாய்ப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கக்கடலில் அண்மையில் உருவான நடா புயல் கடந்த 2ஆம் தேதி வலுவிழந்து காரைக்கால் அருகே கரையை கடந்தது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் மேலும் ஒரு புயல் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.