மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொள்கைகளை பின்பற்றி நடப்பதே அதிமுகவினர் அவருக்கு செய்யும் கடமையாகும் என சட்டப்பேரவை குழுத் தலைவர் ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவை முன்னிட்டு புதுச்சேரியில் அதிமுக சார்பில் வெள்ளிக்கிழமை இரங்கல் பேரணி நடைபெற்றது. டூயுப்ளே சிலை அருகே ஜெயலலிதா படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அதிமுகவினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் அன்பழகன் எம்.எல்.ஏ. பங்கேற்று பேசியதாவது: அதிமுகவை தனது குடும்பம் போல் பாதுகாத்து வந்தவர். இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக விளங்கினார்.
அறிவுசார்ந்த, நிர்வாக திறமைமிக்க, ஜெயலலிதாவின் மறைவு நாட்டுக்கே பேரிழப்பாகும். அவர் மறைந்துள்ள இந்த இக்கட்டான நேரத்தில் நாம் அனைவரும் மனம் தளராமல் அவரது வழியையும், கொள்கைகளையும் கடைபிடிப்பதே நமது கடமையாகும் என்றார் அன்பழகன்.
மாநில அவைத் தலைவர் பாண்டுரங்கன், இணைச் செயலர்கள் பேராசிரியர் ராமதாஸ், வெங்கடசாமி, பரசுராமன், பெரியசாமி, பன்னீர்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.