புதுதில்லி
இந்தியாவில் பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகளை விரைவில் அச்சடிக்க உள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேகவால் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:
பிளாஸ்டிக் நோட்டு அச்சடிக்க ரிசர்வ் வங்கி நீண்ட காலமாக ஆலோசனை நடத்தி வந்தது. கடந்த 2014ம் ஆண்டு, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு, கொச்சி, மைசூரு, ஜெய்ப்பூர், சிம்லா மற்றும் புவனேஸ்வரில் சோதனை முறையாக பிளாஸ்டிக் நோட்டுக்கள் அச்சடித்து வெளியிடப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
பிளாஸ்டிக் அல்லது பாலிமர் மூலக்கூறுகளால் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த 2015 ம் ஆண்டு டிசம்பர் மாதம், ஹோஷிங்காபாத் பாதுகாப்பு பேப்பர் மூலம் நாசிக்கில் அச்சடிக்கப்பட்ட ரூ.100 நோட்டில் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு தெரிவித்தது.
அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக்கூறினார். முதன் முறையாக ஆஸ்திரேலியாவில்தான் பிளாஸ்டிக் நோட்டு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.