சென்னை விமான நிலையத்தில் 70வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தின் கண்ணாடி அடிக்கடி உடைந்து விழுவது வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது. இந்நிலையில் இன்று காலை உள்நாட்டு விமான நிலையத்தின் ஒன்றாவது நுழைவு வாயிலில் உள்ள 2 பெரிய கண்ணாடிகள் திடீரென உடைந்து விழுந்தன. ஆனால் இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. வேகமாக வந்த காரில் இருந்த ஆணி பட்டதால் விபத்து ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே விமான நிலையத்தில் மிகப்பெரிய அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் உள்ள கண்ணாடி இன்றுடன் 70வது முறையாக உடைந்து விழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.