மதுரை,
தீபாவளி பண்டிகையையொட்டி அருள்மிகு மீனாட்சி அம்மனுக்கு தங்க கவசம், வைர கிரீடம் அலங்காரம் செய்யப்படுகிறது.
தீபாவளியன்று அதிகாலையில் எண்ணெய்க் குளியல் முடித்து புத்தாடை அணிந்து, பெரியோர்களிடம் ஆசி பெற்ற பிறகு, குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று வருவது வழக்கம். இதையொட்டி பெரும்பாலான கோயில்களில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சிறப்பு தரிசனம் நடைபெறும்.
இதன்படி மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் தீபாவளி சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சனிக்கிழமை காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் சுவாமி-அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடைபெறும்.
மீனாட்சியம்மனுக்கு தங்க கவசம், வைர கிரீடம் அலங்காரம் செய்யப்படுகிறது. சுந்தரேசுவரருக்கு வைர நெற்றிப் பட்டை சாத்துப்படி செய்யப்பட்டு தீபாவளி சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.