பட்டாசு விற்பனைக்கு அனுமதி: விதிகளை பின்பற்றுவது அதிகாரிகள் கடமை
சென்னை,
பட்டாசு விற்பனைக்கு அனுமதி வழங்கும் விஷயத்தில் விதிகளை பின்பற்றுவது அதிகாரிகளின் கடமை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தடயம் பாபு என்பவர் தாக்கல் பொது நல மனு விவரம்: பட்டாசு கடைகள் அமைப்பதற்கு தாற்காலிக உரிமம் வழங்கும் போது, அதிகாரிகள் எந்தவித விதிமுறைகளையும் முறையாக பின்பற்றுவதில்லை.
இதன் காரணமாக, பெரும் விபத்துக்கள் ஏற்படும் போது மனித உயிர்கள் உயிரிழக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. ஆகவே, கடலூர் மாவட்டத்தில் பட்டாசு விற்பனை செய்வதற்கு என்று தனியாக இடங்கள் ஒதுக்க வேண்டும். இது போன்று தனி இடம் ஒதுக்கீடு செய்தால், விபத்துகள் ஏற்படும் போது மனித உயரிழப்பு போன்றவற்றை தவிர்க்க முடியும். இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு: பட்டாசு விற்பனைக்கு அனுமதி வழங்கும் போது, சட்ட விதிகள் மீறப்படுவதாக மட்டுமே மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், எந்த மாதிரியான விதிமீறல் என்பதற்கான ஆதாரங்களை தெரிவிக்கவில்லை.
ஏற்கெனவே உள்ள வெடி பொருள் சட்டம்-1884-இல் கூறிய விதிகளை பின்பற்றுவது அதிகாரிகளின் கடமையாகும். விதிகளை பின்பற்றவில்லை என்று மட்டும் தான் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். ஆகையால், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம். மேலும் பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கும் போது, வெடி பொருள் சட்டம்-1884 குறிப்பிட்டுள்ள விதிகளை அதிகாரிகள் முறையாக பின்பற்றுவது அவர்களின் கடமையாகும் என்று நீதிபதிகள் அதில் குறிப்பிட்டுள்ளனர்.