கடனுக்கான வட்டி விகிதங்களை நிர்ணயம் செய்வது தொடர்பாக அக்., 3-4 தேதிகளில் நிதிக் கொள்கை நிர்ணயக்குழு கூட்டம்
மும்பை, செப். 30: கடனுக்கான வட்டி விகிதங்களை நிர்ணயம் செய்வது தொடர்பாக நிதிக் கொள்கை நிர்ணயக் குழுவின் (எம்.பி.சி.) முதல் ஆலோசனைக் கூட்டம் அக்டோபர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நடப்பு 2016-17-ஆம் நிதி ஆண்டுக்கான நான்காவது நிதி கொள்கையில் கடனுக்கான வட்டி விகிதங்களை நிர்ணயம் செய்வது தொடர்பாக அக்டோபர் 3 மற்றும் 4 தேதிகளில் நிதிக் கொள்கை நிர்ணயக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தலைமையில் நடைபெறும் முதல் கூட்டமாகும்.
இந்த கூட்டத்தில் எடுக்கும் முடிவுகள் அக்டோபர் 4-ஆம் தேதி பகல் 2.30 மணிக்கு ரிசர்வ் வங்கி வலை தளத்தில் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுவரையில் கடனுக்கான வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி ஆளுநரே நிர்ணயித்து வந்த நிலையில், தற்போது அந்தப் பணியினை நிதிக் கொள்கை நிர்ணயக் குழு மேற்கொள்ள உள்ளது. அந்தக் குழுவில், மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி சார்பில் தலா 3 உறுப்பினர்கள் என மொத்தம் ஆறு பேர் இடம்பெற்றுள்ளனர்.