மேட்டூர்,
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79.50 அடியாகக் குறைந்தது. காவிர நடுவர் மன்றத் தீர்ப்பின்படி கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுத்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாகச் சரிந்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 796 கன அடியாக சரிந்தது.
இந்த நிலையில், காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து நொடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர்வரத்தைவிட நீர் திறப்பு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 79.50 அடியாகச் சரிந்தது. நீர் இருப்பு 41.46 டி.எம்.சியாக இருந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79 அடியாகச் சரிந்ததால், பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் காவிரியில் மூழ்கி இருந்த கிறிஸ்துவ ஆலயத்தின் கோபுரம் நீருக்கு வெளியே தெரியத் தொடங்கியது.
மேட்டூர் அணை கட்டப்பட்டபோது நீர்த்தேக்கப் பகுதியில் குடியிருந்த மக்கள் அங்கிருந்து வேறு பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். அப்போது அந்த மக்கள் தங்களின் வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்தாமல் விட்டுச் சென்றனர். அப்படி விட்டுச் சென்ற வழிபாட்டுத் தலங்கள் மேட்டூர் நீர்த் தேக்கம் பண்ணவாடியில் ஜலகண்டேசுவரர் ஆலயம், கிறிஸ்துவ ஆலயம், கீரைக்காரனூரில் சோழப்பாடி வீரபத்திரனர் கோயில் மற்றும் மீனாட்சியம்மன் கோயில் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
அணையின் நீர்மட்டம் 80 அடிக்குக் கீழே குறையும் போது அவை நீருக்கு வெளியே தெரியும். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடிக்கு மேலே உயரும்போது அனைத்து ஆலயங்களும் நீரில் மூழ்கிவிடும்.