சென்னை ஆர்.கே. நகர் தொகுதியை முன் மாதிரியாக மாற்றுவேன் என்று அதிமுக (அம்மா) வேட்பாளர் டி.டி.வி. தினகரன் கூறினார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக (அம்மா) கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டி.டி.வி. தினகரன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் 41-ஆவது வார்டு சிவாஜிநகர், அஜிஸ்நகர், கார்னே8204ஷன் நகர், குமரன் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆட்டோவில் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டினார்.
இரட்டை இலை துரோகிகளாலும், எதிரிகளாலும் முடக்கப்பட்டுள்ளது. இரட்டை இலையை மீட்டெடுக்க தொப்பி சின்னத்தில் எனக்கு வாக்களியுங்கள் என்று டி.டி.வி. தினகரன் பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தின் போது அவர் மேலும் பேசியதாவது:- ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் ஜெயலலிதாவின் அன்பிற்கும், பாசத்திற்கும் என்றும் உரியவர்கள். பின் தங்கிய ஆர்.கே.நகர் தொகுதியை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை இப்பகுதி மக்களுக்கு கொண்டு வந்து செயல் படுத்தினார்.
இளைஞர்கள், பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தினார். மேலும் பல புதிய திட்டங்களை கொண்டு வருவதற்கு அதிமுக அரசு தயாராக இருக்கிறது. 4 ஆண்டுகள் இன்னும் ஆட்சி உள்ளது. அதனால் இப்பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதே என் நோக்கமாகும்.
இந்த தொகுதியை முன் மாதிரி தொகுதியாக மாற்ற தொப்பி சின்னத்தில் எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். நான் உங்களில் ஒருவனாக இருந்து இந்த தொகுதியிலேயே தங்கி மக்கள் பணியாற்றுவேன். தொகுதி மக்களுக்கு என்னென்ன தேவையோ அதனை அறிந்து செயல் படுத்துவேன் என்றார் அவர். பிரசாரத்தில் சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்ட செயலாளர் பி.வெற்றிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.