தமிழக விவசாயப் பிரச்னைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து தீர்வு காண வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
வறட்சியினால் தமிழகத்தில் இதுவரை சுமார் 400 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். வறட்சிக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும், விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி தில்லியில் தமிழக விவசாயிகள் 20 நாள்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை மத்திய, மாநில அரசுகள் எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறது என்றே தெரியவில்லை.
மத்திய அரசு விவசாயப் பிரச்னையை தமிழக அரசுதான் தீர்க்க வேண்டும் என்று கூறுகிறது. தமிழக தமிழக அரசு இப்பிரச்சனைக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும் என்று கூறுகிறது. இந்தப் போட்டியால் விவசாயிகளுக்கு எந்த தீர்வும் ஏற்படப் போவதில்லை. எனவே, விவசாயப் பிரச்னைகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையே தீர்வாக அமையும் என்று கூறியுள்ளார்.