புதுச்சேரி: புதுவையில் வரும் மே 1-ம் தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என போக்குவரத்து ஆணையர் எஸ்.டி.சுந்தரேசன் தெரிவித்துளளார். அவர் வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரியில் பெருகி வரும் வாகன விபத்துக்களை குறைப்பது தொடர்பாக கடந்த ஜனவரி 25-ம் தேதி முதல்வர் தலைமையில் நடைபெற்ற மாநில சாலைப் பாதுகாப்பு சபையில எடுக்கப்பட்ட முடிவின் படி மே 1ம் தேதி முதல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பயனிப்போர் ஹெல்மெட் அணிவது கட்டாயமாகிறது.
புதுச்சேரியில் விற்பனையாகும் வாகனங்களில் 85 சதவீதம் இருசக்கர வாகனங்கள் தான். கடந்த 2016-17 நிதியாண்டில் புதுச்சேரியில் விற்பனையான 66,378 வாகனங்களில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 57,439 ஆகும்.
கடந்த 2016-17ம் நிதியாண்டில் புதுச்சேரியில் நிகழ்ந்த 1755 விபத்துக்களில் 219 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 831 விபத்துக்கள் இருசக்கர வாகன ஓட்டிகளால் ஏற்பட்டுள்ளது.
விபத்தின் மூலம் 79 இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரிழந்துள்ளனர். தரமான ஐஎஸ்ஐ சான்று பெற்ற தலைகவசம் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டுவதால் தலைக்கு ஏற்படும் படுகாயம் 70 சதவீதத்துக்கும் தடுக்கப்படுகிறது.
தினமும் அலுவுலகங்கள், பள்ளிகள் மற்றும் சொந்த வேலையாக இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்தும் மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் தவறாமல் ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பான சாலைப் பயணத்தினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இரு சக்கர வாகன ஓட்டும் ஆண், பெண் இருபாலரும் ஹெல்மெட் அணிய வேண்டும்.
பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு இரு சக்கர வாகனங்களில் செல்லும் மாணவ, மாணவியர் அதற்குரிய ஓட்டுநர் உரிமம் பெற்றிருந்தல் வேண்டும். மேலும் ஹேல்மெட் அணிந்திருத்தல் வேண்டும். இது குறித்து சுற்றறிக்கை அனைத்து மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளுக்கு முன்னரே அனுப்பப்பட்டுள்ளன. இருசக்கர வாகனம் ஓட்டுபர்கள் உரிய ஓட்டுநர் உரிமம், வாகன உரிமைச் சான்றிதழ், வாகன தகுதிச் சான்றிதழ்,, வாகன காப்பீட்டு சான்றிதழ், வாகன சான்றிதழ்கள் ஆகியவற்றினை தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்.
வாகனம் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர் தலைக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் வாகனம் ஓட்டிச் செல்லும் போது மொபைல் போன் பேசக்கூடாது. இருசக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே செல்ல வேண்டும்.
இந்த நெறிமுறையினை கடைப்பிடிக்காத இருசக்கர வாகன ஓட்டிகளிடம் அவர்கள் செய்யும் தவறுகளுக்கு ஏற்பட ஒவ்வொரு தவருக்கும் ரூ. 100, ரூ. 300, 500 என அபராதம் விதிக்கப்படும்..
போக்குவரத்து சட்ட விதிகளை மீறுவதால் ஏற்படும் சாலை விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் தவிற்பதற்காக மேற்படி நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்பதால் அனைத்து தரப்பினரும் சாலை விதிகளை கடைபிடித்து விபத்தினை தவிர்க்கவும்.
சாலை விதிகளை கடை பிடிக்காதவர்கள் செலுத்த வேண்டிய அபராதத் தொகை விரைவில் பலமடங்கு உயர வாய்ப்புள்ளது. என்பதால் தகுதியான ஹெல்மெட் வாங்கி அணிந்து போக்குவரத்துத் துறை மற்றும் போக்குவரத்து காவல் துறையின் நடவடிக்கையினை தவிர்த்து பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ள வேண்டும்.