புதுச்சேரி: தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் சட்டம் பயில வேண்டும் என முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.
காலாப்பட்டில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி ஆண்டு விழா இன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் வின்சென்ட் அற்புதம் வரவேற்றார். முதல்வர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கிப் பேசியதாவது:
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இக்கல்லூரி தோற்றுவிக்கப்பட்டது. நகரில் சிறிய இடத்தில் இயங்கி வந்த இக்கல்லூரி இங்கு அனைத்து வசதிகளுடன் மாற்றப்பட்டது.
பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் இந்த கல்லூரிக்கு வளர்ச்சி எதையும் கொண்டுவரவில்லை. தற்போது காங்கிரஸ் ஆட்சி இக்கல்லூரியில் மீண்டும் வளர்ச்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
இக்கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்ற முயற்சித்து வருகிறோம்.
சட்டக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தமிழில் படிப்பதா? ஆங்கிலத்தில் படிப்பதா? என்ற மன நிலையில் இருப்பர். இரண்டு மொழியிலும் சட்டத்தை படிப்பதே சிறந்தது.
அதுபோல் வாதாட செல்லும்போது தங்களிடம் வருபவர்கள் அனைவரிடமும் உங்கள் வழக்கில் வெற்றி உறுதி என்று வாக்குறுதி அளிக்கக்கூடாது. எந்தெந்த வழக்குகளில் வெற்றி பெறுவோம், எந்தெந்த வழக்குகளில் வெற்றி பெற முடியாது என்பதை தெளிவாக கூறிவிட வேண்டும்.