கென்யாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் கென்யாட்டா வெற்றி பெறுவது உறுதியாகிவிட்ட நிலையில், எதிர்க்கட்சியினர் வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கென்யா அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. துவக்கத்தில் இருந்தே அதிபர் கென்யாட்டா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றதால், அவர் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இதனால் ஒடிங்காவின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒடிங்காவின் கோட்டையாக கருதப்படும் கிசுமு நகரில் ஏராளமானோர் திரண்டு கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ‘ஒடிங்கா இல்லையென்றால் அமைதி இல்லை’ என்று முழக்கம் எழுப்பினர். அவர்களை போலீசார் கலைந்து செல்லும்படி வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டக் காரர்கள் கலைந்து செல்லாமல் கற்களை வீசி தாக்கத் தொடங்கினர். எனவே, அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அங்கு கலவரம் வெடித்தது. இதேபோல் நைரோபி குடிசைப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.