தலைமைச் செயலகத்தில் இன்று மாலை செய்தியாளார்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றி பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்று கூறினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியதாவது: போயஸ் இல்லத்தை அரசு இல்லமாக மாற்ற உரிமையில்லை. அதனை எங்களால் விட்டு தர முடியாது. வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. இந்த விவகாரம் குறித்து சட்டத்தின் மூலமாக நடவடிக்கை எடுப்பேன். அரசியல் ஆதாயத்திற்காகவே இவ்வாறாக அரசு செயல்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.
ஓ. பன்னீர் செல்வம் பதவிக்காத்தான் போராடி வருகிறார் என்றும் குற்றம் சாட்டினார். மேலும் போயஸ் கார்டன் இல்லம் தங்களுக்குத் தான் சொந்தம் என்று பாட்டி சந்தியா உயில் எழுதி வைத்துள்ளதாகவும் தீபக்கும் தீபாவும் கூறி வருகின்றனர்.
ஜெயலலிதா நடிகையாக இருந்த போது சம்பாதித்த பணத்தில் வாங்கியது போயஸ் கார்டனின் ஒரு பகுதி. எனவே அவற்றை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்றும், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் தீபக் ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.