நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சி பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. பாட்னாவில் நிதிஷ்குமார் வீட்டில் நடந்த கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கே.சி.தியாகி கூறும் போது கட்சியில் பிளவு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ்குமார் கட்சி இணைந்ததை கண்டித்து சரத்யாதவின் ஆதரவாளர்கள் நிதிஷ்குமார் வீட்டு முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே பாட்னாவில் நடந்த மக்களை சந்திக்கும் பொதுச்கூட்டத்தில் பேசிய சரத்யாதவ் நிதிஷ்குமாரின் முடிவை வன்மையாக கண்டித்தார். பாரதிய ஜனதாவுடன் கைகோர்க்கும் நிதிஷ்குமாருக்கு சரியான பாடத்தை மக்கள் கற்பிப்பார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் நிதீஷ் குமார் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா விடுத்த அழைப்பை ஏற்று கூட்டணியில் இணைவதாக ஐக்கிய ஜனதா தளம் அறிவித்தது. விரைவில் அக்கட்சிக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது.