உத்தரப் பிரதேச மாநிலம் முஸாபர் நகரில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
பூரி ஹரித்வார் கலிங்கா உத்கல் விரைவு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டது. இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. 50 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ரயில் விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா 3.5 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.
ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான செய்தி கேட்டு வருத்தம் அடைந்ததாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவித் தெரிவித்துள்ளார். ரயில் விபத்து சம்பவம் வேதனையளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இச்சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்றும் சம்பவ இடத்துக்கு 2 அமைச்சர்கள் விரைந்துள்ளனர் என்றும் கூறியுள்ளர்.