காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் சிகிச்சை பெற்ற பத்தாம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவியை உடனடியாக சென்னை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் தராததால் பரிதாபமாக உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நசரத்துபேட்டையை சேர்ந்த நெசவாளர் ஆனந்தனின் மகள் சரிகா. பத்தாம் வகுப்பு பயின்று வரும் இவரது 2 சிறுநீரகமும் செயலிழந்ததை தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ஒரு வாரத்திற்கு முன்னர் சேர்க்கப்பட்டார். நேற்று மதியம் சரிகாவின் உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர் பரிந்துரைத்துள்ளார்.
இதையடுத்து ஆம்புலன்ஸ் வேண்டியபோது உடனடியாக தரமறுத்துவிட்டு, பரிந்துரை செய்து 7 மணி நேரத்திற்கு பிறகே, மாணவியை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் தந்துள்ளனர். சென்னை நோக்கி வரும்போது போரூர் அருகே சரிகா பரிதாபமாக உயிரிழந்தார்.
மருத்துவமனையில் 3 ஆம்புலன்ஸ்கள் இருந்தும், மாணவியின் உடல் நிலையை கவனத்தில் கொள்ளாமல் சிறு விபத்து நேரிடும் பகுதிகளுக்கு தொடர்ச்சியதாக ஆம்புலன்ஸை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது.
ஆம்புலன்ஸ் வசதி பெறுவதில் தாமதமானது குறித்து சம்மந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்று அரசு மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.