குஜராத்: ஆமதாபாத் சாலை பயணத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நிலத்திலும், கடலிலும் பயணிக்கும் விமானத்தில் இன்று முதல்முறையாக பயணம் செய்கிறார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமர் இன்று இரண்டாம்கட்ட பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு பிரசாரம் மேற்கொள்ள மோடிக்கும், ராகுலுக்கும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க மறுத்துவிட்டது. பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி காவல்துறை இந்த தடையை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று கடல் விமானத்தில் பயணம் செய்ய பிரதமர் மோடி முடிவு செய்ய திட்டமிட்டார். இது குறித்து அவரது தனது டுவிட்டர் பக்க பதிவில். அனைத்து இடங்களிலும் விமான நிலையங்கள் கட்ட முடியாது. இதனால், மத்திய அரசு நீர்வழிப்பாதைகளில் கவனம் செலுத்தி வருகிறது. நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக சபர்மதி ஆற்றில் கடலில் இறங்கும் விமானம் தரையிறங்க உள்ளது. அந்த விமானத்தில் தரோய் அணை பகுதியிலிருந்து அம்பாஜி கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்ப உள்ளேன். சாலை வழி பேரணிக்கு கட்சி திட்டமிட்டது. ஆனால், மாவட்ட நிர்வாகம் அனுமதி தரவில்லை. இதனையடுத்து. அம்பாஜி கோயிலுக்கு கடலில் இறங்கும் விமானத்தில் செல்ல உள்ளேன் என்று பதிவிட்டிருந்தார்.
இதன்படி சபர்மதி ஆற்றில் இருந்து கடல் விமானம் மூலம் மேசனா மாவட்டம் தரோய் அணைக்கு செல்லும் பிரதமர் மோடி. பின் அங்கிருந்து அம்பாஜி கோவிலுக்கு செல்கிறார். அங்கு வழிபாடு நடத்திவிட்டு மீண்டும் தரோய் அணையில் இருந்து புறப்பட்டு கடல் விமானம் மூலம் சபர்மதி ஆற்றுக்கு வந்து இறங்குகிறார்.
கடல் விமானத்தின் சோதனை ஓட்டம் ஏற்கனவே முடிந்த நிலையில், இந்தியாவில் முதல்முதலில் இயக்கப்படும் கடல் விமானச் சேவையாக இது அறியப்படுகிறது.
இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு பிரதமர் இது போன்ற வித்தியாசமான முறையில் பிரசாரம் செய்ய இருக்கிறார் குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ரூபானி கூறுகையில், இந்தியாவின் வரலாற்றில் கடலில் இறங்கும் விமானம் சபர்மதி ஆற்றில் தரையிறங்க உள்ளது. இந்த விமானத்தில் பிரதமர் மோடி பயணம் செய்து அம்பாஜி கோயிலுக்கு சென்று திரும்புவார் என்று கூறியுள்ளார்.