அகமதாபாத்: குஜராத் மாநில சட்டப்பேரவையின் 2-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 183 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் இறுதிக்கட்ட 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு அமைதியான முறையில் நடந்து வருகிறது. பிரதமர் மோடி பிற்பகல் 12 மணி அளவில் சக வாக்காளர்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
பின்னர் காரில் உர்வலம் சென்ற அவர் மக்களை பார்த்து கைகாட்டியவாறு சென்றார். இதையடுத்து பிரதமர் மோடி தேர்தல் விதிகளை மீறி விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. அரசியல்வாதிகள் தேர்தல் பிரசாரத்தில் மேற்கொள்ளும் தெருவழி பிரசாரம் போன்று பிரதமர் மோடியின் இந்த பேரணி காணப்பட்டது. இந்தியாவின் பிரதமர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுகிறார். வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் சாலையில் பிரசார ஊர்வலம் முன்னெடுக்க அனுமதி உள்ளதா? என காங்கிரஸ் கட்சியின் தலைவர் பவான் கேரா கேள்வியை எழுப்பி உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா பேசுகையில், பிரதமர் மோடியின் செயல்பாடு குஜராத் தேர்தலில் எப்படியாவது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை காடுகிறது.
அனைத்து அரசியலமைப்பு பொறுப்புகளையும் தன்னிடம் கொண்டு உள்ள தேர்தல் ஆணையம் இதிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு உள்ளது. தேர்தல் ஆணையம் பா.ஜனதாவின் ஒரு அமைப்பாக மாறிவிட்டது. பிரதமர் மோடியின் சாலை பேரணியானது தேர்தல் ஆணையம் பிறரால் ஆட்டிவைக்கப்படும் பொம்மை என்பதை நிரூபித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் கூறும் போது வாக்களித்தப் பின்னர் பிரதமர் மோடி விரலை காட்டியவாறு சென்றது ஒரு சாலை பிரசாரம் மேற்கொண்டது போல் இருந்தது. பிரதமர் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் அழுத்தத்திற்குட்பட்டு தேர்தல் ஆணையம் செயல்படுவதையே இது காட்டுகிறது என்று அவர் கூறினார்.