அரசு நிர்வாகத்தின் உண்மையான தலைவர் முதல்வர்தான், ஆளுநர் பதவி என்பது பெயரளவுக்கு மட்டுமே என்று மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழகத்தில் பல பகுதிகளில் சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டார். இதற்கு பல்வேறு கட்சிகளிடம் இருந்து எதிர்ப்புகள் வந்தன. எனினும், அரசியல் சட்டத்தின்படியே ஆய்வு நடத்தப்படுகிறது என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழக ஆளுநரின் ஆய்வு குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், அரசு நிர்வாகத்தின் உண்மையான தலைவர் முதல்வர் மட்டுமே.
அரசு நிர்வாகத்தை பொருத்தவரை ஆளுநர் பதவி என்பது பெயரளவுக்கு மட்டுமே. ஆளுநரின் ஆய்வுக் கூட்டங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்று அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்த வேண்டும்.
மத்திய அரசை கண்டு முதல்வர் அச்சம் கொள்வதால்தான் ஆளுநர் அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.