சோனிபட்: ஆதார் அட்டை இல்லாததால் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்ட கார்கில் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் மனைவி தனியார் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். நாட்டுக்காக உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவிக்கு ஏற்பட்ட நிலை அரியானா மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லட்சுமண தாஸ். ராணுவ வீரரான இவர் கார்கில் போரில் உயிரிழந்தார். இவரது மனைவி சகுந்தலா. இவரது மகன் பவன்குமார்.
சகுந்தலா கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்டு இருந்தார். அதனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதைத்தொடர்ந்து,
பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. பவன்குமார் சோனிபட் நகரில் உள்ள ராணுவ அலுவலகத்தை அணுகினார். அங்கிருந்த உயர் அதிகாரிகள் தனியார் மருத்துவமனையை நாடலாம் என பரிந்துரைத்தனர்.
இதையடுத்து, பவன் குமார் தனது தாயை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அவர்கள் ஆதார் அட்டை கேட்டுள்ளனர். அப்போது தனது செல்போனில் இருந்த தனது தாயாரின் ஆதார் அட்டையின் நகலைக் காட்டியதுடன், நீங்கள் சிகிச்சையை ஆரம்பியுங்கள், இன்னும் ஒரு மணி நேரத்தில் ஆதாரை பெற்றுவிடுவேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் ஆதார் இல்லாமல் அனுமதிக்க முடியாது என மறுத்துவிட்டது.
இதையடுத்து தனது தாயை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பவன்குமாரின் தாய் சகுந்தலா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பவன்குமார் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது புகார் செய்தார். ஆனால், பவன்குமாரின் புகாருக்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், சிகிச்சை அளிக்க ஆதார் அட்டை அவசியம் தான். ஆனால் அது ஆவணங்களை பராமரிக்க மட்டும்தான். ஆதார் அட்டை இல்லை என்றாலும் நாங்கள் சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவிப்பதில்லை என தெரிவித்துள்ளனர்.
காரில் போரில் நாட்டுக்காக உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவிக்கு ஏற்பட்ட நிலை அரியானா மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.