பெங்களூரு: மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உறுதிபட தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறும் போது காவிரி டெல்டா பகுதியில் உள்ள மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்த கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான திட்டவரைவு தயாரிக்க உலகளவில் டெண்டர் விடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், 59,000 ரூபாய் கோடி செலவில் இத்திட்டம் நிறைவேற்றப்படும்.
எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம். கர்நாடகாவில் அதிக மழை பெய்து 4 அணைகளும் நிரம்பிய பின்னர் தமிழகத்திற்கு அதிகளவில் தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும் குறிப்பிட்டார்.
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் அரசியல் கட்சியினரும், விவசாயிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சித்தராமையா இவ்வாறு கூறியிருப்பதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.