பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
திருவள்ளூர் மாவட்டம் புது கும்மிடிப்பூண்டியில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 15 பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 10 குழந்தைகள் உள்பட 15 பேர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழப்புக்குக் காரணமான காய்ச்சல் எந்த வகையானது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனினும், பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மர்மக் காய்ச்சலுக்கு முக்கியக் காரணம் சுகாதாரக் குறைபாடுகள்தான்.
ஒரு மாநிலத்தில் என்ன நோய் எனத் தெரியாமலேயே பலர் இறப்பதையும், அரசு மருத்துவமனைகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களும் மருத்துவர்கள் இல்லாமல் பூட்டிக் கிடப்பதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த அவலங்கள் அனைத்துக்கும் தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
இனியாவது நோய் பரவலும், உயிரிழப்பும் ஏற்படாமல் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.