ஸ்ரீநடராஜர் கோயில் "ஆருத்ரா தரிசனம்": பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

சிதம்பரம் ஶ்ரீநடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசனம் புதன்கிழமை மாலை 3.45 மணிக்கு நடைபெற்றது.
ஸ்ரீநடராஜர் கோயில் "ஆருத்ரா தரிசனம்": பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

சிதம்பரம்:  ஸ்ரீமந்நடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பு உள்ள நடனப்பந்தலில் நடனமாடி ஆருத்ரா தரிசன காட்சியளித்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று 'நடராஜா', 'சிவசிவா' என கோஷமிட்டு தரிசனத்தை கண்டுகளித்தனர்.

ஸ்ரீநடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன உத்சவம் கடந்த ஜன.2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜன.10-ம் தேதி செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழா நடைபெற்றது.  பின்னர் இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீமந்நடராஜமூர்த்திக்கும்,

ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுக்கும் ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது.  

ஜன.11-ம் தேதி சனிக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் ஶ்ரீநடராஜமூர்த்திக்கும், ஶ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுக்கும் மகாபிஷேகம் நடைபெற்றது. பால், தேன், விபூதி, பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்டவை குடகுடமாக அபிஷேகம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்த்து தரிசித்தனர். 

பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீநடராஜமூர்த்திக்கும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுக்கும் திருவாபரண அலங்காரமும், சிறப்பு அர்ச்சனைகளும் நடைபெற்றன. சிதசபையில் உத்சவ ஆச்சாரியாரால் ரகசிஸ பூஜை நடத்தப்பட்டது. பஞ்சமூர்த்திகள் வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 3.45 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமந்நடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் நடனப்பந்தலில் முன்னும், பின்னும் 3 முறை சென்று நடனமாடி ஆருத்ரா தரிசன காட்சியளித்தனர்.

பின்னர் சித்சபா பிரவேசம் நடைபெற்றது. தரிசனக் காட்சியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர். மகாபிஷேகம் மற்றும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில் மேகாலய மாநில ஆளுநர் வி.சண்முகநாதன் பங்கேற்று தரிசனம் செய்தார். ஆளுநர் பங்கேற்றதை முன்னிட்டு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் விஜயகுமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

உத்சவ ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்களின் செயலாளர் கே.பட்டுரத்தின தீட்சிதர், துணைச்செயலாளர் எஸ்.ஆர்.நடராஜரத்ன தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் வி.நடராஜரத்ன தீட்சிதர் ஆகியோர் செய்திருந்தனர். சிதம்பரம் ஏஎஸ்பி என்.எஸ்.நிஷா  தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மோகன், உதயக்குமார், ரமேஷ்ராஜ், கோவிந்தசாமி ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.  குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை ஆணையர் (பொறுப்பு) கே.ஜெகதீசன் ஆகியோர் செய்தனர். 

அன்னதானம்: கடலூர் மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் கிழக்கு கோபுர வாயிலில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதான நிகழ்ச்சியை மாவட்டத் தலைவர் ஏ.யாகமூர்த்தி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் பி.சுவாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் வி.சங்கர், கே.கணேசன், என்.ராஜா. சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்கம் சார்பில் அதன் மாநிலத் தலைவர் ஜி.சேகர் தலைமையில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com