ஜல்லிக்கட்டை நடத்தக்கோரியும் பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் சென்னை புறநகர்ப்பகுதிகளில் உள்ள பல்வேறு பொறியியல்,கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வண்டலூரை அடுத்த கேளம்பாக்கம் சாலையில் தாகூர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.வேல்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் வேளச்சேரி- பல்லாவரம் ரேடியல் சாலையில் பாரத் பெட்ரோலியம் பங்க் முன்பாக நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஜல்லிக்கட்டை அனுமதிக்கக் கோரியும்.பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கருப்புச் சட்டை அணிந்து கல்லூரி வாசல் முன்பாக கூடி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
கௌரிவாக்கம் எஸ்.ஐ.டி.கல்லூரி மாணவர்கள் பிரின்ஸ் வெங்கடேஸ்வரா கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து தாம்பரம்-வேளச்சேரி சாலையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.