புதுதில்லி: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பதாக மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் முகுல் ரோஹத்கி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசின் மனு மீது மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் தலைமை வழக்குரைஞர் முகுல் ரோஹத்கி (அட்டார்னி ஜெனரல்) ரிடம் கருத்துகேட்கப்பட்டது.
இந்த கேள்விக்குப் பதிலளித்த முகுல் ரோஹத்கி, ஜல்லிக்கட்டுக்காக தமிழக அரசு சட்டம் இயற்றலாம். இதற்காக தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றினால் ஆளுநர் மூலம் ஒப்புதல் பெறுவதில் சிக்கல் இருக்காது. அதேநேரம் தமிழக அரசு இயற்றும் சட்டம் காளைகளைப் பாதிக்காத வகையில் இருந்தால், அதனை உச்சநீதிமன்றம் ஆட்சேபிக்க வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் முன்பு நான் ஆஜராகி இருக்கிறேன். இந்த விளையாட்டில் மிருகங்களுக்கு எதிரான கொடுமைகள் எதுவும் கிடையாது. ஸ்பெயின் நாட்டில் காளைகளை கொல்வது போன்ற கொடூரம் எல்லாம் இங்கு கிடையாது. எனவே, சில வரையறைகளை வகுத்துக்கொண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கலாம் என்று கூறியுள்ளார்.