ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தடையை நீக்க வலியுறுத்தியும், பீட்டா மற்றும் விலங்குகள் நலவாரிய அமைப்புகளை இந்தியாவில் தடைசெய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் கடந்த 4 தினங்களாக தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது.
முதலில் மாணவர்கள் தொடங்கிய இப்போராட்டம் பின்னர் பல்வேறு அமைப்புகள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பங்கேற்றதைத் தொடர்ந்து தமிழகத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் பல லட்சம் பேர் இரவு பகலாக தொடர்ந்து அறவழிப்போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
வழக்கமாக சித்திரைத் திருவிழாவின்போது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின்போது மதுரை தல்லாகுளம் பகுதியில் லட்சக்கணக்கானோர் கூடுவர். அதேபோல, இன்று நடந்த போராட்டத்திலும் திரும்பிய திசையெல்லாம் மக்கள் கூட்டமாகக் காட்சியளித்தது. தமுக்கம் மைதானம் அருகே இருந்து ராஜாஜி பூங்கா, காந்தி நினைவு அருங்காட்சியகம், மருத்துவக் கல்லூரி, ஆட்சியர் அலுவலகம் வரை சாலையின் இரு ஓரங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாகச் சுற்றியபடியே இருந்தனர். உலகத் தமிழ்ச் சங்க பெருந்திட்ட வளாகம் முன்பு மதுரை மழலையர் பள்ளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். உணவக உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அங்கு பேரணி நடத்தப்பட்டது.