உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் மத்திய அரசு எதிர்ப்பாக அமையும்: வைகோ
சென்னை: காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலிலிருந்து காளைகளை நீக்க உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழர்களின் போராட்டம் மத்திய அரசு எதிர்ப்பாக மாறும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடித விவரம்:
தமிழக வரலாற்றில் முதன்முறையாக, மாணவர்கள் மட்டும் அல்லாமல் தாய்மார்கள் குழந்தைகளுடன், முதியவர்கள் பேரப்பிள்ளைகளுடன் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். காட்டு விலங்குகளின் பட்டியலில் இருந்து வீட்டுக் காளைகளை நீக்கி, மத்திய அரசு அவசரச் சட்டம் ஏன் கொண்டு வரக் கூடாது என்ற நியாயமான கேள்வியை எழுப்புகின்றனர்.
மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழர்கள் மனதில் உள்ள வேதனை மத்திய அரசுக்கு எதிர்ப்பாக உருவாகும் எனக் கருதுகிறேன்.
எதிர்காலத்தில் ஜல்லிக்கட்டுக்கு எந்தத் தடையும் நேராதவாறு, உடனடி நடவடிக்கை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
இன்றைய அமைதிப் போராட்டம், எல்லைகளைக் கடந்து வன்முறையாக வெடிக்கக் கூடும். எதிர்பாராத விளைவுகளும் ஏற்படலாம் என்பதை, உங்கள் உடனடிக் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டியது எனது கடமை எனத் தெரிவித்துள்ளார்.