சென்னை: ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதராவாக நிதி மற்றும் ஆட்களைத் திரட்டியதாக சென்னை முத்தையால் பேட்டையைச் சேர்ந்த ஆரூண் என்பவர் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஆரூண் என்பவர் சென்னை முத்தையால் பேட்டையில் வசித்து வந்தார். பர்மா பஜாரில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வந்த இவர் ஈராக் நாட்டில் செயல்படும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு, இந்தியாவில் நிதி மற்றும் ஆட்களை திரட்டியதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜமீல் முகமது என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவருடன் தமிழகத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் தொடர்பில் இருப்பதாக தெரியவந்தது.
இதனையடுத்து, இன்று காலை ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், முத்தையால் பேட்டையில் ஹாரூணை அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆரூண் ராஜஸ்தான் கொண்டு செல்லப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக சிலர் செயல்பட்டு வருவதாக மத்திய அரசுக்கு தொடர்ந்து தகவல் கிடைத்து வருகிறது. அத்தகைய தகவல்களின் பேரில் உளவு அமைப்பினரும் பல்வேறு மாநில காவல்துறையினரும் இணைந்து செயல்பட்டு, பலரைக் கைது செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.