நாக்பூரைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவன் வறுமை காரணமாக தனது தந்தை கேட்டவுடன் பள்ளிப் புத்தகம் வாங்கித் தராததால் திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டான்.
இதுகுறித்து உயிரிழந்த மாணவனின் தந்தை கூறியதாவது:
எனது மகன் என்னிடம் 7-ம் வகுப்புக்கான புத்தகங்கள் மற்றும் பை வாங்க வேண்டும் என்று தெரிவித்தான். என்னிடம் அப்போது போதிய பணம் இல்லாத காரணத்தால், 2 தினங்களில் வாங்கித் தருவதாக கூறினேன். அதற்குள் அவன் இதுபோன்ற முடிவை எடுத்துவிட்டான் என்று வருத்தம் தெரிவித்தார்.
இருப்பினும், அந்த மாணவன் படிக்கும் பள்ளியில் உடனடியாக புத்தகம் மற்றும் பை ஆகியவற்றை வாங்க வேண்டும் என்று அழுத்தம் தந்த காரணத்தால் தான் அவன் இதுபோன்ற முடிவுக்கு தள்ளப்பட்டான் என்று அப்பகுதியில் பரவலாக பேசப்படுகிறது.
இந்நிலையில், அந்த மாணவனின் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில்:
நாங்கள் எந்தக் குழந்தைக்கும் இந்த மாதிரியாகக் கூறப்படும் அழுத்தங்களைக் கொடுப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், ஏழை மாணவர்களின் பள்ளிச் செலவுகளுக்கு எங்கள் பள்ளியில் இருந்து நிதி வழங்கப்படுகிறது. அவன் ஒரு சிறந்த மாணவன். இது எங்கள் பள்ளிக்கு பேரிழப்பு என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.