நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைகள் ஜூலை 1ம் தேதியில் இருந்து அமலாகிறது. இதை முன்னிட்டு, ஜூன் 30ம் தேதி நள்ளிரவு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது.
ஜூன் 30ம் தேதி இரவு 11 மணிக்கு கூட்டம் தொடங்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். இக் கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில் முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா ஆகியோருக்கு இந்த கூட்டத்தில் பங்கேற்க வரும்படி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், கூட்டத்தில் பங்கேற்பது குறித்து மன்மோகன் சிங் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது. மேலும் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட உள்ளது.
இதற்கு முன்பு, 1947ம் ஆண்டு ஆகஸ்டு 15- ம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இதுபோல் நள்ளிரவு சிறப்பு கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.