தமிழக மீனவர்களின் தொடர் படுகொலையைக் கண்டித்து வரும் 13ஆம் தேதி இலங்கைத் தூதரத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த தமிழக மீனவர் பிரிட்சோ, கடந்த 06-03-2017 அன்று, கச்சத்தீவு அருகே மீன் பிடித்தபோது, இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். தமிழ் மீனவரைச் சுட்டுப்படுகொலை செய்த இலங்கை அரசைக் கண்டித்தும், தொடரும் தமிழக மீனவர் மீதான இனவெறி தாக்குதலைத் தடுக்க கச்சத்தீவை மீட்க இந்திய அரசை வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பாக 13ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.
மேலும் இப்போராட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அதில் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.