நாடு முழுவதும் நிகழும் விவசாயிகள் தற்கொலை சம்பவங்களைத் தடுக்க தேசிய - தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தில்லியில் நடைபெறும் போராட்டம் ஐந்தாவது நாளாக சனிக்கிழமை மேலும் வலுப்பெற்றுள்ளது.
ஐந்தாம் நாளாக ஜந்தர் மந்தர் சாலையில் சனிக்கிழமை விவசாயிகள் 17 பேர் மொட்டை அடித்து நூதன முறையில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில் பிரதமரை சந்திக்கும் வரை தில்லியில் விவசாயிகள் போராட்டம் தொடரும் என்றும் அதுவரை அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளார்.