தென்னிந்திய லாரி உரிமையாளர் சங்க வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, மார்ச் 30ஆம் தேதி ஒருநாள் மட்டும் மாநிலம் முழுவதும் மணல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவர் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் செல்ல.ராசாமணி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது: மூன்றாம் நபர் காப்பீடு தொகை 57 சதவீதம் உயர்வு, டீசல் மீதான வாட் வரி உயர்வு, 15 ஆண்டுகளான வாகனங்களை புதுப்பிக்க இயலாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னிந்திய லாரி உரிமையாளர் சம்மேளனத்தினர் வரும் 30ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளதாக, அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
அந்தப் போராட்டத்துக்கு தார்மீக அடிப்படையில் ஆதரவு தெரிவித்து, மார்ச் 30ஆம் தேதி ஒருநாள் மட்டும் மாநிலம் முழுவதும் 80 ஆயிரம் மணல் லாரிகள் இயங்காது. மூன்றாம் நபர் காப்பீட்டுத் தொகை குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக, அனைத்திந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்றார்.