இலங்கையிலிருந்து படகில் கடத்திவரப்பட்ட 4 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல்

இலங்கையிலிருந்து படகில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ தங்கக் கட்டிகளை பாம்பன் கடல்பகுதியில் சுங்கத்துறையினர் இன்று கைப்பற்றினர்.

ராமநாதபுரம்: இலங்கையிலிருந்து படகில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ தங்கக் கட்டிகளை பாம்பன் கடல்பகுதியில் சுங்கத்துறையினர் இன்று கைப்பற்றினர்.

இலங்கையிலிருந்து நாட்டுப்படகு ஒன்றில் தங்கக்கட்டிகள் கடத்தி வரப்படுவதாக ராமநாதபுரம் மாவட்ட சுங்கத்துறை அதிகாரிகளுக்கு  ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தனுஷ்கோடி, அரிச்சல்முனை, குருசடைத்தீவு ஆகிய பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அதிகாலையில் குருசடைத் தீவுக்கும், முயல் தீவுக்கும் இடைப்பட்ட பாம்பன் பகுதியில் நடுக்கடலில் ஒரு நாட்டுப்படகு வேகமாக சென்றதைக் கண்ட சுங்கத்துறையினர், அதை விரட்டிப் பிடிக்க முயன்றனர். அப்போது படகில் இருந்தவர்கள் தங்கக்கட்டிகள் இருந்த எண்ணெய்க் கேன் ஒன்றை கடலில் வீசி விட்டு தப்பிச்சென்று விட்டனர். உடனடியாக சுங்கத்துறையினர் அந்த கேனை எடுத்துப் பார்த்தபோது, அதில் 4 கிலோ எடைகொண்ட 40 தங்கக்கட்டிகள் இருந்தன. பின்னர் அதிகாரிகள் அவற்றை சுங்கத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். படகில் 5-க்கும் மேற்பட்டவர்கள் வந்ததாகவும், அவர்களை இந்தியக் கடலோரக் காவல்படை மற்றும் கடலோரக் காவல்குழும போலீஸாரின் உதவியுடன் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com