ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்க தளபதி சுட்டுக்கொ ல்லப்பட்டதையடுத்து வன்முறைப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது.
ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த சிலர் புல்வாமா மாவட்டத்தில் உள்ள சாமு, டிரால் பகுதிகளில் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த கிராமத்தை தீவிரவாத ஒழிப்பு சிறப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் நேற்றிரவு சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியதில், சப்ஸார் அகமது பட் உள்ளிட்ட 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக இளைஞர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு போராட்டம் வெடித்த பகுதியில், பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்தி போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த மோதல்களில் 19 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.